Tuesday, May 25, 2010

என்னில் நீ இருப்பதை அறிந்தும்



தெய்வமாய் நீ
உந்தன்  சிறப்பால்
எந்தன் சிறுமையின்
உயர்வு

எத்துனை சிறப்புகள்
உனக்கு
உன் நினைவதனில்
அமைதி தந்தவனே

தன் குழுந்தை
சோறு ஊட்ட
அம்மா சொல்லும்
கதைக்கு கருவாய்
வந்த நிலவா நீ

பனித்துளிகள்
பரிதவிக்க
காலையில் தோன்றும்
உதயமா நீ

எதுவாய் நீ?
எல்லாமும் நான்
எப்படிதான்
உனைப்பார்க்க

உனைப்பார்
நான் தெரிவேன் என்று
நீ சொல்ல

எனைப்பார்க்க
கொஞ்சம் உண்மை
கொஞசம் இரக்கம்
நிறைய குழப்பம்
நீங்காத அகங்காரம்

ஏடு படித்து
என்னுள் நீ என்பதை
நான்  அறிய

என்னுள் நீ என்பதை
நான் உணர
வரும் நாள்
எந்நாளோ என்னவனே...


Monday, May 24, 2010

வருமானம் - விவாதம்.

அன்றைய தினம் வருமானத்துக்கு தக்கவாறு செலவு செய்யவேண்டும் என்ற கருத்து நண்பர்கள் வட்டத்தில் விவாதத்திற்கு வந்தது.

இன்றைய சமுதாய சூழலில் செலவு செய்தால் தான் வாழமுடியும் என்கின்ற நிர்பந்தம். பெருகிவரும் செலவினங்கள்  தகுந்தவாறு நாம் தான் மேற்கெண்டு உழைத்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
எனவே  செலவினம் பெருகும் அதே வேளையில் நம்முடைய வருமானத்தை பெருக்கி கொள்ள தகுந்த முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும என்பது ஒரு நண்பனுடைய வாதம்.

நான் தற்பொழுது வரும் செய்துவரும்செலவுகளை குறைத்துகொள்வேன் என்பது இன்னொரு நண்பருடைய வாதம்.

அதெப்படி நீங்கள் செய்துவரும் செலவினங்கள் திடீரென்று குறைத்துகொள்ளமுடியுமா? எந்த மாதிரியான செலவினங்களைகுறைப்பீர்கள் ? என்ற எதிர்வாதத்துக்கு சரியான பதில் இல்லை.

நீங்க வேற நேற்று என்பிள்ளைகள் பூங்காவுக்கு  போக வேண்டும் என்று சொன்னார்கள் தவிர்க்க முடியவில்லை போக வேண்டிய நிர்பந்தம்  செலவு ரூ1000 ஆனது .  கட்டாயம்செய்யவேண்டியதை வாங்கி செய்யவேண்டிய சூழலில் கடன் வாங்கியாவது செய்யவேண்டியுள்ளது.

வாழ்கை முறையும் மாறிவிட்டது. செலவுகள் செய்தே ஒரு தரத்தை  எட்டலாம் அல்லது உருவாக்கி கொள்ளலாம் என்பது தான் உண்மை.  செலவுகள் செய்து பெற கூடிய தகுதியுள்ளவர்கள் சமுதாயத்தில் வாழ கூடிய தகுதியை செலவு செய்தாவது பெற்றுவிடுகிறார்கள். மற்றவர்கள்  ஏதோ அவர்களுக்கு கிடைப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

சொல்லிட்டு எந்த திடீர் செலவு வரது கெடையாது. நாம அவசியம் பண்ணிகிட்டு இருக்குற செலவுகளை குறைப்பது கஞ்சதனத்துக்கு வழிவகுத்துவிடும்.  அதனால வரும்வழி கம்மியா இருந்துச்சின்னா மத்தவங்கள பாக்காம நாம பாட்டுக்கு போயிகிட்டே இருக்கவேண்டியது தான் .

ஆனா  இப்ப இருக்குற சமுதாய சூழல் அது முடியுமா?




Saturday, May 22, 2010

கடல் மனது

எண்ண அலைகள்
வருவதுமாய் போவதுமாய்
வந்து சென்றவை
பலவாய்
ஒன்றும் அறியாது
எதுவும் நடக்காது
கடலாய் மனது
ஓயாத அலைகளாய்
மேலே
உள்ளே செல்ல
தோன்றா அலைகள்
அமைதியாய் கடல்
ஆரவாரமில்லா மனது.

Thursday, May 20, 2010

வாடகை

போரில் தோற்றுவிட்ட அவமானம் தன்னிலை மறக்க குடித்து கொண்டிருந்தார். போர் ஆரம்பித்த நாள் முதலாய் குடிக்க தொடங்கிநடக்க முடியாது தடுமாறி நடந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்வது வாடிக்கையான கதையாகி விட்டிருந்தது.

பல லட்சங்கள் சில வீடுகளுக்கு அதிபதியானவர்.ஒரு சில வீடுகளை வாடகைக்கு குடியமர்த்தி காசு பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒரு வீட்டை மாதம் ரூ1800 வாடகைக்கு விட்டு மூன்று வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்றுள்ள பொருளாதார வீக்கத்திற்கு தகுந்தாற் போல்  இவர் வாடகையை உயர்த்திரூ 3000 வேண்டுமென  குடியிருப்பவரிடம் கேட்க போருக்கான விதை  போடப்பட்டது.

குடியிருப்பவர் திடீரென ரூ 1200 உயர்த்தி கேட்டால் எப்படி கொடுக்கமுடியும் என்று கூற இல்லை  நீங்க ரூ 3000 தரலாம் என்று கூற போர் ஆரம்பம் ஆனது.

குடியிருப்பவர் வாடகையை மாதம் மாதம் மிக சரியாக கொடுத்து விடுவார். இவரை விட மனமில்லாது வீட்டின் உரிமையாளர் பேரம் பேச ஆரம்பித்தார்.

குடியிருந்தவருக்கு கொடுக்க விருப்பமில்லை.  வீட்டுகாரர் கொஞ்சம் முன்கோபகாரர் சரி  வீட்டைகாலி பண்ணிவிடுங்கள் என்று சொல்ல..

காலி பண்ணிவிடுகிறோம் ஆறுமாதம் அவகாசம் தாருங்கள் என்று குடியிருந்தவர் கேட்க..

உடனே காலி பண்ண வேண்டும் இல்லாவிடில் நீங்கள் காலி பண்ணும் வரையில் ரூ 3000 வாடகை தரவேண்டும் என்று வீட்டுகாரர் கூற அது தரமுடியாது குடியிருந்தவர் மறுத்தார்.

மாத முதல் தேதி வர பழைய வாடகையை  வாங்கவீட்டுகாரர்  மறுக்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பி கோர்ட்டில் பணத்தை கட்டிவிட்டார் குடியிருந்தவர்.

போர் உக்கிரம் அடைய ஆரம்பித்தது. வீட்டுகாரர் யார் யாரையோ  வைத்து பேசினார் கோபப்பட்டார் குடியிருந்தவரும் விடாது போர் செய்தார். இருவரின் மன அமைதியும் காணாமல் போனது.

வீட்டுகாரர் குடியிருப்பவருக்கு குறைத்து கொடுத்தால் ஆறு மாதத்திற்கும் ரூ7200 இவருக்குஇழப்பு. குடியிருப்பவர் கொடுத்தால் அதே தொகை  அவருக்கு இழப்பு.

எதிரியாகி கோர்ட் போலீஸ்  என்று இன்னமும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

இருவரும் ஆளக்கொரு ஆளாய் பிடித்து கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இருபக்கமும் ஏச்சுகளும் பேச்சுகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வீட்டுகாரருக்கு தோற்றவிட்டதாய் நினைப்பு  யாரிடம் சொன்னாலும் அவர்தான் ஆறுமாதத்தில் காலி பண்ணிவிடுவதாக சொல்கிறாரே விட்டுகொடுங்கள்  என்று சொல்ல  ....  இவர் குடித்து கொண்டிருக்கிறார்.

Wednesday, May 19, 2010

பரிதவிப்பு



அடித்து பெய்த
கோடை மழை
சுழன்றடித்த காற்று
கண் எதிரே
வந்து விழுந்த
மரகிளைகள்
தென்னமட்டைகள்
பிய்ந்து போன
விளம்பர பலகைகள்
அய்யோ…
எங்கள் கீற்றுவீடு

Sunday, May 16, 2010

ஓர் நாயின் இறுதி



கம்பி சுருக்கை கழுத்தில் போட்டு  சுருக்கி  அந்த நாய் அங்கும் இங்கும் நகராதபடி இழுத்து பிடித்தார்கள்  கழுத்து பகுதியில் இடம் பார்த்து விஷ ஊசி சொருகி விஷத்தை உள்செலுத்தி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் பிடித்தபடியே நின்றார்கள். நாயின் உடல் தளர ஆரம்பிக்க  அப்படியே  விட்டு விட்டு அடுத்த நாயை  துரத்த ஆரம்பித்தார்கள்.

மூன்று குட்டிகளை ஈன்ற அந்த பெண்நாய் கால்கள் பரப்பி தரையில் கிடந்தது. அலைதல் இல்லா  கண்கள் வெறித்தப்படியே இருக்கவாய் எச்சில் வழிந்து தரை தொட்டது. மூச்சின் இயக்கம் தடைப்பட்டு தடைப்பட்டு வந்துகொண்டிருக்க இறுதிகாலத்தின் கடைசி நிமிடங்களில் அது.

உறவிற்காக அதோடு  சுற்றி வந்தவைகள் காணாமல் போயிருக்கஇதற்கென்று ஒரு வீடு இல்லாத  தெருநாயாக இருந்ததால் வந்த வினை.

உரிமம் பெற்று  கழுத்தில் வில்லையுடன்  தூர  நின்று இன்னொரு நாய் இதனுடைய மரணத்தைபார்த்து கொண்டிருந்தது . குரைத்தது   அதற்கு பாதுகாப்பான எல்லையில்நின்று இங்கும் அங்கும் அலைந்தது.கிட்டே வராது இதனுடைய நிச்சயிக்கப்பட்ட மரணத்தை  தடுக்கமுடியாது பார்த்து கொண்டிருந்தது . காதுகள் விடைக்க கூர்ந்து பார்ப்பது பிறகு  ஓடுவதுமாக இருந்தது.

செத்து கொண்டிருந்த நாயின் பக்கதிலிருந்த மனிதன் இந்த நாய் இனி தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையுடன் அடுத்தநாய் பிடித்த இடத்திற்கு செல்ல  உரிமம் பெற்றது ஓடி கிட்டே சென்று முகர்ந்து முனுகியது.

வெறித்தகிடந்த விழிகளில் உயிர்ப்பு முனுகிய நாயின்
விழிகளை பார்த்தப்பின் தன் இறுதி மூச்சை விட்டது அந்த நாய்.

இறந்த நாய் ஈன்ற ஆண் குட்டி தான்  உரிமம் பெற்ற நாய்.

Friday, May 14, 2010

நீ என்பது நீயல்ல

நிமிர்ந்து நில்
நீ என்பது நீயல்ல

காலங்கள்வரும்
காத்திரு
வாய்த்தவுடன் உள்நுழை
விலகாது செல்
வழி தெரிய
நீ என்பது  நீயல்ல
அறி

நீ முழுமை
நீ நிரந்தரம்

தடைகள் பல
கடந்து
உனை அறிப்பொழுது
நீ உணர்
நீ என்பது நீயல்ல

நீ காற்று
நீ நீர்

அழிவில் உருவாகும்
விந்தை பார்
அழிவில் உருவாக
நிலையை அடை

நெருப்பால் உருவாகி
நெருப்பால் அழிந்து
நீ என்பது நீயல்ல

Thursday, May 13, 2010

முதிர்ந்த இலை

முதிர்ந்த இலைகள் கொட்டி கிடந்தன. அது உட்கார்ந்து வேலை செய்வதற்கான இடத்தை சுத்தம் செய்தது. 

எடத்த கூட்டி போட மாட்டேங்குறாங்க   நாம தான் கூட்டிகனும்?  என்று தனாய் பேசியப்படி கூட்டியது.

வாழ்க்கையில் பேரன் பேத்தி எடுத்து நல்லது கெட்டது வாழ்ந்து அனுபவித்துஇப்பவும் தன் கைஉழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தது.

அந்த மரநிழலில் உட்கார்ந்து கீற்று பின்னுவதுதான் அது வேலை. கீற்று ஒன்றுக்கு கூலி ரூபாய் ஒன்று. நாளைக்கு அறுபது எழுபது கீற்றுகள் பின்னும்.

குத்துகாலிட்டு உட்கார்ந்து பின்ன ஆரம்பிக்கும் யாருடனும்  பேசாது யாரும் பேச இருக்கமாட்டர்கள் அந்தபகல் பொழுதில் அதுக்கு உதவி செய்யும் ஆளும் வேறு வேலை பார்த்து கொண்டிருந்தால் இது தனி தான். 

மனதில் தோன்றியவை சேதியாக வரும் பாட்டாக வரும்சிரிக்கும் அழவும் செய்யும். வேலையுடன் கூடிய தனிமைபொழுதுகள் இப்படிதான் கழியும்.

வேலை இல்லா நாட்களில் சுள்ளி பொறுக்கும் அதுவும் இல்லா நாட்களில் அறுப்புநாட்களில் களத்தில் விவசாயிகள் விட்டு சென்ற ஒன்று இரண்டுநெல்மணிகளை கல் மண் பிரித்து ஒன்று சேர்த்து அன்றைய செலவுக்கு தயார்செய்யும்.

யாரும் கிட்டே நெருங்கி பேசினால் வாய் நிறைய சிரிப்புதான்   பாட்டாக தான் பதில் வரும்.   பேசியவர்கள் சிரித்து மகிழ்வார்கள் பேசி முடிக்கும்வரை சிரித்தப்படியே இருக்குமாறு பேசும்.

வாழ்க்கை மரத்தில் பழுப்பாகி நிற்கும்  அந்த இலை   உதிர காத்துஇருக்கிறது. காற்றின் போக்கில் எந்த திசையிலும் அசைந்தப்படியே அதன் போக்கு.

Monday, May 10, 2010

சூஃபி பாடல் ஒன்று


நான் கனிப்பொருளாக இறந்தேன்
ஒரு செடியாக ஆனேன்
நான் செடியாக இறந்தேன்
மிருக நிலைக்கு உயர்ந்தேன்
மிருமாக நான் இறந்தேன்
மனிதனாக எழுந்தேன்
திரும்பவும் இறக்க நான் தயார்
தயக்கமேன்? என்ன குறை?
மீண்டும் ஒருமுறை மனிதனாக இறப்பேன்
மிகுந்த உயரத்தில் பறப்பேன்
வேண்டும் தேவதைகளால் ஆசி பெற்றேன்
எனினும் தேவதை நிலையிலிருந்தும்
மீண்டும் என்பயணம் தொடரும்
ஏனெனில் இறைவனைத் தவிர
வேண்டும் அனைத்தும் அழிந்திடும்
ஒருநாள் தேவதைகளும் மறைந்திடும்
எனது தேவதைத் தன்மையை நான்
இயல்பாய் தியாகம் செய்தபின்
கனவிலும் கற்பனையிலும் கண்டிராத
புதுமையாய் நிச்சயம் ஆவேன்
ஓ..என்னை வாழவிட வேண்டாம்
ஏனெனில் இல்லாமல் இருப்பது
ஓசைகளில் சேதி தன்னை வெளிப்படுத்தும்
ஒருநாள் அவரிடமே அனைவரும்
ஒடுங்குவதாய் திரும்பிச் செல்வோமென்று.

-சூஃபி ஞானி ஜலாலுதீன் ரூமி-
                       

Friday, May 07, 2010

நீங்க சாமிய பாத்துருகீங்களா.

ஓரே இடத்தில் உழன்று கொண்டிருந்ததால் மனதுக்கு சிறிது மாற்றம் தேவைப்பட்டது. நண்பர்களுடன் முடிவு செய்து எங்கள் ஊர் பக்கத்து ஊரில் இருக்கும்  பெரியவர் ஒருவரின் ஜீவசமாதிக்கு சென்றுவருவோம் என்று முடிவு செய்து அந்த ஊருக்கு சென்றோம்.          

முதல்தடவை சென்றபோது அந்தஇடத்தின் அமைதி  மிகுந்த மனநிம்மதியை கொடுக்க அடுத்த பத்துநாட்கள்  கழித்து திரும்பவும் அதே இடத்திற்கு சென்றோம்.

இந்தமுறை முக்தி அடைந்த பெரியவரின்  கதையை அறிந்து கொள்ளும் ஆவலுடன் அந்த ஊர்  முதியவர் ஒருவரை
அணுகினோம்.

தம்பி எனக்கு வயசு எண்பத்தஞ்சு…

அய்யா நீங்க  சாமிய பாத்துருகீங்களா.

நல்லா பாத்துருக்கேன் பெப்பர் மி்ட்டாய் இல்ல அப்ப டின்லு தான் வரும்  அத வாங்கிட்டு பாக்கறவங்களுக்கு ஒரு கைப்பிடி கொடுக்கும் தம்பி.

அய்யா இங்க வந்தவரா  பொறந்தவரா

இல்ல தம்பீ பக்கத்து ஊருல மாடு மேய்ச்சுகிட்டு இருந்திச்சு ஒரு நாள் ரொம்ப நேரம் தூக்கிட்டுன்னு
வேலைக்கு வைச்சிருத்தவன் அடிச்சான் .

அந்தநேரம் பாத்து எங்க ஊரு லேந்து போனவங்க  ஏம்பா அடிக்கிறேன்னு கேட்டு அத அழச்சிட்டு வந்துட்டாங்க  அதிலேந்து அது இங்கதான்.

அது தான்  அந்தா இருக்கு பாருங்க அந்த முருகன் கோயில கட்டிச்சு அப்புறம் கிராமத்துல சேந்து பெரிசா கட்டினாங்க.

இங்க ரெண்டு குடும்பம் இருந்தீச்சு  எனக்கு தெரிஞ்சு பத்துவேலி நெலம்   அவுங்களுக்கு சாமிய பாத்து சாமியாவது   பூதமாவுது  ரொம்ப கடுப்பு ஏத்திகிட்டே இருந்தாங்க..

சாமி  போறப்ப  …நீங்க உருப்புடமா போவீங்க சொன்னிச்சு இன்னிக்கு  பத்து மா நெலம் கூட இல்ல தம்பீ.

அப்புறம் எங்கபோச்சு ங்க சாமி..

சாமியா அப்படி சொல்லும் சந்தேகம் எங்களுக்கு ஆனாலும் கேட்கவில்லை.

இந்த ஊரு கொடுத்து வைக்க ல  எங்கேயோ மெட்ராசுக்கு பேறவழியாம் அங்க போயி சமாதி ஆயிடுச்சு.

அது வாழ்ந்தது இங்க சமாதி அங்க தான் தம்பி.

வெளியூர் ஆளுங்க வந்து என்ன என்னம்மோ செய்யுறாங்க தம்பி  எல்லா பெரிய ஆளுங்க..

அத நல்லபடியா கவனிச்சு வைச்சிருந்தா இந்தஊரு  இன்னநேரம் எங்கேயோ தம்பி .

வர்றேங்க என்று விடைபெற்று
நிறைய சந்தேகங்களுடன் அந்த இடம் அகன்றோம்.

Thursday, May 06, 2010

வரதட்சணை



கேட்கையில்
பேசுகையில் போதும்
இடைசொருகலாய்
இன்னொருவரின்
வார்த்தைகளாய்
இன்னும் வேண்டும்
திகைத்த பெண்வீடு
பின்வாங்க
பெண்ணுக்கு
மாப்பிள்ளை தேடுதல்
புதுமுயற்சி

Monday, May 03, 2010

எந்ததுறையிலமவுசு அதிகம்



கணினி துறையில்வேலைப் பார்த்துவரும் நண்பர் ஒருவரிடம்  பேசி கொண்டிருந்தோம்.  இன்னொரு நண்பர்  டியூசன் சென்டர் நடத்திவருகிறார்.

அவரிடம் அந்த நண்பர் கேட்டார் இப்ப எல்லாரும்  சாப்ட்வேர்  ..சாப்ட்வேர் அப்படின்னு சொல்லுறாங்க..  இப்ப அதோட மவுசு கம்மி வருங்காலத்துல எந்ததுறையிலமவுசு அதிகம்  அப்படின்னு கேட்டாரு.

இப்ப நான் படிச்சு தெரிஞ்சிகிட்டவரையிலும் சோலார் எனர்ஜி ,   காற்றாலை மின்சாரம், இயற்கை விவசாயம்போன்ற துறைகளில் நல்லதொரு வாய்ப்பு உள்ளது.

நீங்க தான் உங்க மாணவர்களுக்கு   சொல்லனும்.நாங்கசொல்லறதுக்கும் நீங்க சொல்லற வித்தியாசம் நிறைய உண்டு. இன்னொரு கொடுமையான விசயம் என்ன அப்படின்னா ஆசிரியர் பயிற்சி முடிஞ்சு வாத்தியார் ஆன  பெரும்பாலானவர்கள் உலகில் நடக்கும் எந்த மாற்றங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை.  இவர்கள் எப்படி மாணவர்களுக்கு சரியான வழியை காட்டிவிடமுடியும்.

நாம தான் ஏதோ நம்மால் ஆன முயற்சி செய்துபார்க்கவேண்டும்  என்று கூற வேலை  ..வேலை என்று வேலை கிடைப்பதற்குமுன் அதற்கு உள்ள முயற்சி வேலை கிடைத்த பிறகு அதற்குண்டான அர்பணிப்பு உணர்வு மிகவும் கம்மியாக உள்ளது.

போலீஸ்காரர்கள் யாரும் வேலை கிடைத்தபிறகு உடற்பயிற்சி செய்வதே கிடையாது வேலை கிடைப்பதற்கு முன்  எப்படியெல்லாம் தன் உடலை வருத்தி கொண்டிருப்பார்கள் தெரியுமா..

மாற்றங்கள் தேவை.  அந்த மாற்றங்களை உங்களை போன்ற ஆசிரியர்கள் தான்   விதைக்க வேண்டும் என்று கூறினார்.

LinkWithin

Related Posts with Thumbnails