காலம் கடந்த ஞானம் என்பது தன்னுடைய தவறான செயல்களை திரும்பி
பார்த்தலின் விளைவாகதான் போலும் கீழ்கண்ட செய்தியின் நாயகன் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்
கதையும் இவ்வாறு தான் போலும்…
அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்,
தான் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.
1999 முதல் 2005-ம் ஆண்டு வரையில் பிரபல சைக்கிள் பந்தயமான உலக
டூர் டி பிரான்ஸ் போட்டியில் பட்டம் வென்று முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர்
ஆம்ஸ்ட்ராங். இவர், ஊக்கமருந்து உபயோகித்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
கடந்த ஆண்டு அக்டோபரில் அவருடைய பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, சாதனைகளும்
அழிக்கப்பட்டன.
நீண்ட நாள்களாக தன் மீதான புகாரை மறுத்து வந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த
திங்கள்கிழமை அமெரிக்காவில் உள்ள ஓ.டபிள்யூ.என். டிவி நெட்வோர்க் உரிமையாளரான
ஓப்ரா வின்பிரேவுக்கு அளித்த பேட்டியில் தனது தவறை ஒப்புக் கொண்டார்.
டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டில் வைத்து பதிவு
செய்யப்பட்ட அவருடைய பேட்டியின் ஒரு பகுதி வியாழக்கிழமை இரவு ஒளிபரப்பு
செய்யப்பட்டது. கேள்வி, பதில் வடிவில் அமைந்துள்ள அந்த பேட்டியில், ஊக்கமருந்து
உட்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ள அவர், "ஊக்கமருந்து இல்லாமல் டூர் டி பிரான்ஸ்
போட்டியில் வெல்ல முடியும் என்று நினைக்கவில்லை. 2009-ம் ஆண்டு மீண்டும்
போட்டியில் பங்கேற்க வராமல் இருந்திருந்தால், ஊக்கமருந்து விவகாரத்தில்
சிக்கியிருக்க மாட்டேன்.
எனது நீண்டகால நம்பிக்கைக்குரிய நண்பரும், என்னுடன் பயிற்சி பெற்று
நான் வென்ற 7 போட்டிகளிலும் என்னுடன் ரேஸில் கலந்து கொண்டவருமான லெப்டினென்ட்
ஜார்ஜ் ஹின்கேப்பியை ஊக்கமருந்து தடுப்பு அமைப்பிடம் புகார் சொல்லுமாறு
நிர்பந்திக்கப்பட்டபோதே என்னுடைய தலைவிதி தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இந்த
விஷயத்தில் வேறு யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை.
சாம்பியன் பட்டம் வென்ற 7 போட்டிகளின் போதும் ஊக்கமருந்து
உட்கொண்டேன். ஊக்கமருந்து தடுப்பு அமைப்பினரிடம் இருந்து தப்பிப்பதற்காக எனது
ரத்தத்தையும் மாற்றிக்கொண்டேன்.
நான் செய்தது மிகப்பெரிய தவறு. மன்னிக்க முடியாததும் கூட. மக்கள்
என்னை மன்னிக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்திருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment