சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு
முன்பிருந்தே ஆடப்பட்டு வரும் யஷ கானம் தென்னிந்தியாவின் தொன்மையான கிராமியக்
கலைகளில் ஒன்று.
கர்நாடக மாநிலத்தின் பிரதான
நாட்டியநாடக வடிவமாக இருந்தாலும் யஷகான நிகழ்ச்சிகள் வடகேரள மாநிலத்திலும் ஆந்திராவிலும் கூட நடத்தப்படுகின்றன.
இந்து புராணங்களின்படி குபேரன்
செல்வத்துக்குக் கடவுளாகக் கருதப்படுகிறார். அமரர் உலகில் வசிக்கும் குபேரனது
ஊழியர்களான யஷர்கள் பாடும் பாடலே யஷகானம்
என்று சொல்லப்பட்டாலும் வேதங்கள்இதிகாசங்கள் மற்றும்புராணங்கள் போன்றவை சாமானிய
மக்களை எளிதில் சென்று அடைவதற்காக பாடல் , ஆடல் மற்றும் வசனங்களுடன் உருவாக்கப்பட்ட கலையே யஷகானமாகும்.
தீயவை ஒழிந்து நல்லவை தெய்வ சக்தியால் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை மக்கள்
மனதில் என்றுமே நீங்காமல் நிறைந்துள்ளது. யஷகானம் ராமாயண மகாபாரத மற்றும் இந்து
புராணக்கதைகளாகவும் அவற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளாகவும் அமைந்துள்ளது. ராவண
சம்ஹாரம் கீசகவதம் மகாபாரத யுத்தம் பிரஹலாத சரித்திரம் சபரி பக்தி ஆகியவை பிரபலமான
சில யஷகான கதைகள்.
யஷகானம் ஆலய மண்டங்களிலும் செல்வந்தர் வீடுகளிலும் ஆடப்படுகிறது. ரங்கஸ்தலா
என்று அழைக்கப்படும் யஷகான மேடை மாவிலை மலர்கள் வாழைமரங்கள் தென்னை ஓலையின்
குருத்துகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்துடன் காணப்படுகிறது.
-காஷ்யபன்-