Monday, August 26, 2013

அணு ஆயுத முத்திறன் (படித்தது)

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லரின் ஜெர்மானிய சப்மரீன்கள் (நீர்மூழ்கிக் கப்பல்கள்) அட்லாண்டிக் கடலில் பிரிட்டிஷ் போர்க்கப்பல்களைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்தன. அதே போரின்போது ஜப்பான், ராட்சத சப்மரீன்களை உருவாக்கி அந்த சப்மரீன்களுக்குள் விமானங்களை வைத்து அமெரிக்காவின் மேற்குக்கரை வரை அனுப்பியது. இவையெல்லாம் அணுகுண்டுகளும் நீண்ட தொலைவு செல்லும் ஏவுகணைகளும் உருவாக்கப்படுவதற்கு முன் நடந்தவை. அப்போதைய சப்மரீன்கள் டீசலினால் இயங்கியவை.
சப்மரீன்களில் டீசல் எஞ்சின்களை பயன்படுத்துவதில் பெரிய பிரச்னை உண்டு. கடலில் மூழ்கியபடி அதிக தொலைவு செல்வதானால் நிறைய டீசல் எண்ணெயை கையோடு கொண்டு சென்றாக வேண்டும். தவிர, டீசல் எஞ்சின்கள் சத்தம் மற்றும் புகையை எழுப்புபவை. கடலுக்கு அடியில் எழும் ஒலிகளைப் பதிவு செய்ய நுட்பமான கருவிகள் உள்ளன. ஆகவே டீசலினால் இயங்கும் சப்மரீன்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். எனவே மின்சார பாட்டரிகளால் இயங்கும் சப்மரீன்கள் உருவாக்கப்பட்டன. சப்மரீன் கடல் மட்டத்துக்கு மேல் வந்து மிதக்கும். அப்போது டீசல் எஞ்சின்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு பாட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பின்னர் சப்மரீன் நீருக்குள் மூழ்கி விடும். இதில் உள்ள பெரிய பிரச்னை சப்மரீன் அடிக்கடி மேலே வந்தாக வேண்டும். இதன் மூலம் அந்த சப்மரீன் தான் இருக்கின்ற இடத்தைக் காட்டிக் கொடுத்துவிடும்.
இரண்டாம் உலகப்போர் முடியும் கட்டத்தில் அமெரிக்கா முதல் தடவையாக அணுகுண்டை உருவாக்கி அதை 1945 ஆம் ஆண்டில் வெடித்து சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்களைத் தயாரிக்கலாயிற்று. சப்மரீன்களில் அணுசக்தியைப் பய்ன்படுத்துவதில் பல வசதிகள் உள்ளன. சப்ம்ரீனில் இருக்கும் அணு உலையானது தொடர்ந்து 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு செயல்படக்கூடியது. ஆகவே போதுமான உணவு கையிருப்பு இருக்குமானால் அணுசக்தி சப்மரீன் தொடர்ந்து பல மாத காலம் நீருக்குள் இருக்க முடியும். கடலின் எந்த மூலைக்கும் செல்ல முடியும். அங்கிருந்தபடியே எதிரி நாட்டைத் தாக்க முடியும்.
அணுசக்தியால் இயங்கும் சப்மரீன்கள் வடிவில் பெரியவை. அவற்றினுள் பல ஆயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைப் பொருத்தலாம். ஏவுகணைகளின் முகப்பில் பல அணுகுண்டுகளைப் பொருத்தலாம். நீருக்குள் மூழ்கியிருந்தபடியே இந்த ஏவுகணைகளைச் செலுத்த முடியும்.
அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் (ரஷியா தலைமையில் ஒன்றிணைந்திருந்த கூட்டமைப்பு) இடையே கடும் விரோதப் போக்கு நிலவிய காலகட்டத்தில் (1990 வரை) இரு நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பல நவீன அணுசக்தி சப்மரீன்களைத் தயாரித்தன.
இன்னமும் சரி, அமெரிக்காவிடமும் ரஷியாவிடமும்தான் நிறைய அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் உள்ள அணுசக்தி சப்மரீன்களின் எண்ணிக்கை அதிகமில்லை. சீனாவிடமும் அணுசக்தி சப்மரீன்கள் உள்ளன. இப்போது இந்தியாவும் சொந்தமாக அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளது. உலகில் அணுசக்தி சப்மரீனைப் பெற்றுள்ள ஆறாவது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியா தயாரித்துள்ள அணுசக்தி சப்மரீனின் பெயர் அரிஹந்த் என்பதாகும். "எதிரியை நிர்மூலமாக்குபவன்' என்பது இதன் பொருள்.
இந்த சப்மரீனில் இடம் பெற்றுள்ள அணு உலை ஆகஸ்ட் முதல் வாரத்தில் செயல்பட ஆரம்பித்தது. இனி இது கடலுக்குள் இருந்தபடி பல சோதனைகளை நடத்தும். எல்லாம் முடிந்து அரிஹந்த் இந்திய கடற்படையில் இடம் பெற இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
அரிஹந்துக்கான அணு உலை கல்பாக்கத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளில் நிறுவப்பட்ட அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள அணு உலைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
இந்திய அணுமின் நிலையங்களில் இடம் பெற்றுள்ள (தாராப்பூர் அணுமின் நிலைய முதல் யூனிட், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீங்கலாக) அணு உலைகள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துபவை. இயற்கை யுரேனியத்தால் அவ்வளவாகப் பயன் இல்லை. யுரேனிய உலோகத்தில் அடங்கிய அணுக்களில் யுரேனியம்- 235 எனப்படும் அணுக்களும் உள்ளன. அவைதான் முக்கியமாகத் தேவை. இந்த வகை அணுக்களே பிளவு பட்டு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும். வெப்பத்தை அளிக்கும். அதைக் கொண்டு நீராவியை உண்டாக்கி மின்சாரம் தயாரிக்கலாம்.
இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் யு-235 அணுக்கள் 0.7 சத விகித அளவுக்கே உள்ளன. மீதி அணுக்கள் யு-238 வகையைச் சேர்ந்தவை. எனினும் பெரும் செலவு பிடிக்கிற, அத்துடன் மிகவும் சிக்கலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி யுரேனியக் கட்டியில் யு-235 அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதை செறிவேற்றுதல் என்று கூறுவார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் யுரேனியத்தில் யு-235 அணுக்களின் அளவு அதாவது செறிவேற்றப்பட்ட யுரேனியம் சுமார் 4.5 சதவிகித அளவுக்கு உள்ளது. ஆனால் அணுசக்தி சப்மரீனில் இடம் பெறுகிற அணு உலையில் யு-235 அளவு, குறைந்தது 25 சதவிகித அளவுக்கு இருந்தாக வேண்டும். அரிஹந்த் சப்மரீனில் இத்தகைய அணு உலை இடம் பெற்றுள்ளது. இது கல்பாக்கத்தில் கட்டப்பட்டதாகும். இந்த அளவுக்கு செறிவேற்றப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தும் அணு உலை இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
சப்மரீனுக்காக அணு உலையை தயாரிப்பது சிக்கலானது. அது நிறைய இடத்தை அடைத்துக் கொள்ளக்கூடாது. வடிவில் சிறியதாக இருக்க வேண்டும். தவிர, சப்மரீன் நீருக்குள் செல்லும் போது மேலும் கீழுமாக அசையும். சில சமயம் திடீரென வேகம் அதிகரிக்கும். ஆகவே சப்மரீனில் இடம் பெறுகின்ற அணு உலையானது எல்லாவித ஆட்டங்களுக்கும் அசைவுகளுக்கும் ஈடு கொடுக்க வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, சப்மரீன் என்பது விசேஷ கலப்பு உருக்கினால் தயாரிக்கப்படுவதாகும். அமெரிக்கா ஒரு கால கட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக விதித்த தடை காரணமாக எந்த நாடும் இப்படியான விசேஷ உருக்கை இந்தியாவுக்கு விற்க முன் வரவில்லை. இந்திய நிபுணர்கள் பெரும் பாடுபட்டு இவ்வித விசேஷ கலப்பு உருக்கைத் தயாரிப்பதில் வெற்றி கண்டனர். அதைத் தொடர்ந்தே அரிஹந்த் சப்மரீனை உருவாக்குவது சாத்தியமானது.
அரிஹந்துக்கான அணு உலையை கல்பாக்கத்தில் வைத்து அதன் செயல்பாடு குறித்து நிபுணர்கள் திருப்தி அடைந்த பிறகே அது விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த அரிஹந்த் சப்மரீனில் இடம் பெற்றது.
அணு உலை என்பது கதிரியக்கத்தைத் தோற்றுவிப்பதாகும். அந்த கதிரியக்கம் சப்மரீனில் பணியாற்றும் மாலுமிகளை பாதிக்காதபடி விசேஷ ஏற்பாடுகள் உள்ளன. சில கார்களில் எஞ்சின் பின்புறம் அமைந்திருக்கும். அது போல அரிஹந்தின் பின்புறத்தில்தான் அணு உலை இடம் பெற்றுள்ளது. அதை அடுத்து ஏவுகணைகள் இடம் பெறுகின்றன. சப்மரீனில் செங்குத்தாக அமைந்த நீண்ட குழல்களில் இந்த ஏவுகணைகள் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும். ஏவுகணைகள் சுமார் மூன்று மாடி உயரம் கொண்டவை. இவற்றின் முகப்பில் அணுகுண்டுகள் இடம் பெற்றிருக்கும். அரிஹந்த் மூழ்கிய நிலையில் இருந்தாலும் ஏவுகணைகளை எதிரி இலக்கை நோக்கிச் செலுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் அரிஹந்த் சப்மரீனில் சில நூறு கிலோ மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெற்றிருக்கும். பின்னர் 3500 கிலோ மீட்டரில் உள்ள எதிரி இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறும்.
இந்தியா 1998-ஆம் ஆண்டில் நிலத்துக்கு அடியில் அணுகுண்டுகளை வெடித்து சோதனை நடத்தியபோதே "அணு ஆயுத வல்லரசு' என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ஆனால் ஒரு நாடு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைப் பெற்றால் மட்டும் போதாது. அணுகுண்டுகளை நிலத்திலிருந்து (ஏவுகணைகள் மூலம்) வான் வழியாக (விமானங்கள் மூலம்), கடல் மார்க்கமாக (அணுசக்தி சப்மரீன்கள் மூலம்) என மூன்று வழிகளிலும் எதிரி நாட்டை நோக்கிச் செலுத்தும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இது அணு ஆயுத முத்திறன் எனப்படும். இப்போதுள்ள அளவில் அமெரிக்காவும் ரஷியாவும் இத்திறனைப் பெற்றுள்ளன. சீனாவுக்கும் இத்திறன் உண்டு. அணுசக்தி சப்மரீனை உருவாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவும் இத்திறனைப் பெற்று விட்டது. அணுகுண்டுகளைச் செலுத்துவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைத் தயாரிக்கும் திட்டத்தை பிரான்ஸýம் பிரிட்டனும் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டன. ஆகவே இந்த இரு நாடுகளுக்கும் அணு ஆயுத முத்திறன் கிடையாது. பாகிஸ்தானுக்கும் கிடையாது.
சீனாவும் சரி, பாகிஸ்தானும் சரி, இந்தியாவிடம் நட்புறவு காட்டுவதாகச் சொல்ல முடியாது. பாகிஸ்தான் நான்கு முறை இந்தியா மீது ஆக்கிரமிப்பு நடத்திய நாடு. சீனா ஒரு தடவை தாக்கியுள்ளது. இந்த இரண்டுமே அணுகுண்டுகளை வைத்துள்ளவை. இப்படியான சூழ்நிலையில்தான் இந்தியா அணு ஆயுத முத்திறனைப் பெறுவதில் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளது.

நன்றி : தினமணி

Thursday, August 22, 2013

தலைமுறைகளை இணைத்தால் மன அழுத்தத்தை தவிர்க்கலாம் (பகிர்வு)

தாத்தா மற்றும் பாட்டிகளோடு, அவர்களது பேரன் பேத்திகள் நன்கு விளையாடி மகிழ்ந்தால், இருவருக்குமே மன அழுத்தம் குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது நமக்கு புதிய செய்தி அல்ல. நாம் ஏற்கனவே வாழ்ந்து அறிந்த செய்திதான். ஆனால், அதை நாமே மறந்துவிட்டு தற்போது அவசர கதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து சிறிய குடும்பங்களாகிவிட்டதால் தாத்தா பாட்டிகளோடு, பேரக் குழந்தைகள் கொஞ்சி மகிழ வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
தனியாக ஓரிடத்தில் வயதான காலத்தில் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தாத்தா, பாட்டிகளும், பள்ளி, பள்ளி முடிந்து டியூஷன், இதர பயிற்சிகள் என பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கும் பேரன், பேத்திகளும் ஒரே இடத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, கொஞ்சி மகிழ்ந்து, விளையாடி, கதைகளைச் சொல்லி, கேட்டு, பாடல்கள் பாடி, அதனைக் கேட்டு வாழ்ந்து வந்தால், இரு தலை முறையினருக்குமே மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
ஆனால், இதற்கெல்லாம் நமக்கெங்கு நேரம் என்றில்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர்களை சந்திக்க வழி ஏற்படுத்தி, இரு தலைமுறைக்கும் இடையே பெற்றோர் ஒரு பாலமாக இருந்தால், உங்கள் மூத்த தலைமுறையும், எதிர்கால தலைமுறையும் ஆரோக்கியமாக இருக்கும்.

நன்றி : தினமணி

Friday, August 16, 2013

வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர் (பகிர்வு)

ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும் சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம், கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று. ஒவ்வொரு வீட்டினரின் பங்களிப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஒரு நாடு என்பது பல சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகும்.
சமுதாயம் என்பது பல வீடுகளில் வாழும் மக்களின் தொடரமைப்பு ஆகும். சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாக குடும்பம் விளங்குகிறது. குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான். பெற்றோர்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள்.
ஒரு வீடானது, மக்களை நல்லவர்களாக அடையாளப்படுத்தும் பண்புகளான அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து தூண்களைத் தாங்கியதாகவும், தூய்மை, நல்லறிவு, இரக்கம், பொறுமை ஆகிய நான்கு சுவர்களைக் கொண்டதாகவும், அமைதியை கூரையாகவும், சிரத்தையை தளமாகவும், இறை வழிபாட்டினை வாயிலாகவும், அருள் அதனுள் வீசும் காற்றாகவும், ஆனந்தம் அங்கு நிகழும் இசையாகவும் கொண்டு அமைய வேண்டும்.
அப்போதுதான் அந்த வீட்டிலுள்ளவர்கள் அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத் தன்மை, அறம் சார்ந்த பண்புகள் ஆகியவை உடையவர்களாக இருப்பார்கள்.
நாம் வசிக்கும் வீடே அறிவு வளர்ச்சிக்கும் ஒழுக்கலாற்றுக்கும் களனாக அமைகிறது. ஒழுக்க இயல்புகள் வீட்டின் வழிதான் அமையும். "குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்' என்கிறார் கம்பர். உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் உலைகளனாக ஒருவனுக்கு அவன் வீடு அமைகிறது. வீட்டில் உள்ள முதியோரும், பெற்றோரும், உற்றார் உறவினர்களும் எந்நிலையில் இருக்கிறார்களோ, அந்நிலையில்தான் அங்கு வளரும் குழந்தைகளும் இருப்பார்கள். அந்த வீட்டில் அன்பு வாசம் வீசினால், அவர்களின் பண்பு நலன்கள் வெளியிலும் அவ்வாறே மணம் வீசும். ஒருவன் வீட்டிலிருந்து என்ன மனநிலையில் கிளம்புகிறானோ அந்த மனநிலையில்தான் வெளியில் அவன் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். எனவே, ஒருவனின் நன்மையும், தீமையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகளில் தான் அமைந்துள்ளது.
அதாவது, ஒருவனுக்கு இரு கண்களாக இருக்கும் கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையுமே அவனுக்கு கற்றுத் தருவது அவன் வசிக்கும் வீடே.
ஒழுக்கம் என்பது ஒருவன் தன் உயர்வை விரும்பி தனக்கு என சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகும். நமக்கு தீமை செய்வாரும் நாமே, நமக்கு நன்மை செய்வாரும் நாமே என்பதை உணர்ந்து வீட்டிலுள்ளவர்கள் செயல்பட்டால், சமுதாயமும் நாடும் நேரிய வழியில் செல்லும்.
கூடையிலுள்ள ஒரு அழுகிய பழம் அடுத்தடுத்த பழங்களை அழுக வைத்திடும். ஒரு தொற்று நோய் ஓரிருவருக்குவரினும் அது ஊரையே பலியாக்கி விடும். அதுபோல, ஒரு வீட்டில் துன்பமும் வன்முறை எண்ணமும் காழ்ப்புணர்ச்சியும் துளிர் விட்டால், அது அந்த வீட்டிலுள்ளவர்களை அழிப்பதோடு, சமுதாயத்திற்குள் புரையோடிய புண்ணாகி பின்னர் நம் உயிராகிய நாட்டையே அழிக்க முற்படுகிறது. ஒரு நல்லவனின் உள்ளம் சார்ந்தது சாராதது எதையும் கெடுக்காது.
எனவே, வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவோடு நல்லுணர்வோடு தாங்கள் கெடாத தன்மையோடு பிறர் கெடாமல் இருக்கத் தக்க சூழலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் கெட்டுப் போவதில்லை. இல்லையெனில் வீட்டில் யார் பெரியவர், யார் சம்பாதிக்கிறவர், யார் அறிவாளி, யார் அறிவிலி, படிக்காதவன், படித்தவன் ஆகிய தன்னுணர்ச்சி, தற்பெருமை, அகங்காரம், தன்நலம் ஆகிய களைகள் முளைத்து வீட்டையே அழித்து சமுதாயத்திற்குள் அவப்யெரையும் உண்டாக்கி நாட்டையே இன்னல்களுக்கு உள்ளாக்கும்.
அரசு குடிமக்களைக் காக்கும் கடன் கொண்டதாயினும், வீடே பெற்ற மக்களை வழி நடத்தும் பொறுப்பு வாய்ந்தது. எனவே, நாம் வாழும் வீடு ஒரு கோயிலாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு தெய்வங்கள் என்றால், நமது உற்றார் உறவினர்கள் நமக்கு காவல் தெய்வங்கள். நாம் செய்யும் நல்வினை, தீவினைகளைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும்.
ஒருவன் வீட்டின் சூழ்நிலையைப் பொறுத்தே அவன் வாழ்வில் சொர்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் பாரதியாரும், "வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழ தகுந்த இடத்திற்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பதக்கதன்று. வீடு துயரிடம் ஆவதற்கு காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே' என்கிறார்.
ஒரு நாள் ஈசாப் ஏதென்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம் வந்து "ஏதென்ஸ் நகர மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா' எனக் கேட்டான். உடனே ஈசாப், "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "ஐயோ என் வீடு ஒரு சண்டைக்காடு யாரிடமும் ஒற்றுமை இல்லை' என்றான். ஈசாப் "அப்படியானால் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.
இன்னொருவன் வந்து அதே கேள்வியை அவரிடம் கேட்டான். அவனிடமும் ஈசாப் "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "என் வீடு ஒரு அமைதிப் பூங்கா, அங்கு எப்போதும் அன்பு மணம் வீசும், ஒருவரையொருவர் பழிப்பதில்லை' என்றான். அப்போது ஈசாப் "அப்படியானல் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.
வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராக இருந்தால் நாடும் அவ்வாறே இருக்கும். எனவே, உண்மையான மகிழ்ச்சி என்பது அவரவர் வீட்டில்தான் இருக்கிறது. வெளியில் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை. உள்ளம் அமைதி பெறவே உறையுள்.

நன்றி : தினமணி

Tuesday, August 13, 2013

புகைப்படதொகுப்பு

வெய்யிலின் கொடுமை விரைவாக நடக்கும் மனிதன்  நிழல் கண்ட இடம் படுத்துறங்கும் முதியவர் தண்ணீரை தேடும் முதியவர்  சாவு வீட்டின் நிழலில் சாவை அடையாளப்படுத்து முதியவர்.






Monday, August 12, 2013

சீனா சாதிக்காததை இந்தியா சாதிக்குமா? (பகிர்வு)

சந்திரனுக்கு வெற்றிகரமாக சந்திரயானை அனுப்பிய இந்தியா இப்போது செவ்வாய் கிரகம் மீது கண் வைத்துள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்குமானால் வருகிற நவம்பர் மூன்றாம் வாரத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி இந்திய விண்கலம் செலுத்தப்படும்.
சந்திரனுக்கு இந்தியா 2008 அக்டோபரில் அனுப்பிய விண்கலம் சந்திரயான் என்று பெயர் கொண்டதாக இருந்தது. செவ்வாய்க்குச் செல்ல இருக்கும் விண்கலத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. அதற்கு மங்கள்யான் என பெயரிடப்படலாம் என்று கருதப்படுகிறது(இந்தி மொழியில் செவ்வாய்க்கு மங்கள் என்று பெயர்).
மங்கள்யான் திட்டம் நிறைவேறுமானால் உலகில் செவ்வாய் கிரகத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும். ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியன ஏற்கெனவே இதைச் சாதித்துள்ளன. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்ப பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வேறு விதமாகச் சொன்னால் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்புவதில் சீனாவை இந்தியா முந்திக் கொண்டது என்று கூறலாம்.
இந்தப் பெருமையைப் பெறும் நோக்கில் தான் மங்கள்யான் திட்டத்தில் இந்தியா முனைந்துள்ளதாக ஒரு கருத்து உண்டு. நிபுணர்கள் சிலர் இந்தியாவின் மங்கள்யான் திட்டம் வீண் செலவு என்றும் இந்த நேரத்தில் இந்தியா இதில் ஈடுபடத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். இந்திய விண்வெளி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் மாதவன் நாயரும் இவ்விதமாகவே கூறுகிறார்.
விண்கலங்களை காவு கொள்ளும் கிரகம் என்ற பெயர் செவ்வாய்க்கு உண்டு. கடந்த பல ஆண்டுகளில் செவ்வாய் நோக்கி செலுத்தப்பட்ட சுமார் 40 விண்கலங்களில் 19 மட்டுமே வெற்றி கண்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்குச் சொந்தமானவை.
ஒரு விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புவதென்பது வேறு. செவ்வாய்க்கு அனுப்புவது என்பது வேறு. சந்திரன் எப்போதும் பூமியைச் சுற்றிக் கொண்டிருப்பது. பூமியிலிருந்து சந்திரன் சுமார் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பூமியைச் சுற்றி வருகின்ற காரணத்தால் சந்திரன் எப்போதும் கிட்டத்தட்ட அதே தொலைவில் இருப்பதாகும்.
செவ்வாய் சமாச்சாரம் வித்தியாசமானது. செவ்வாய் கிரகமும் சரி, பூமியும் சரி வெவ்வேறு வட்டங்களில் இருந்தபடி சூரியனை சுற்றுபவை. ஆகவே செவ்வாய்க்கும் பூமிக்கும் இடையே குறைந்தபட்ச தூரம், அதிகபட்ச தூரம் என்பது உண்டு. செவ்வாய்க்கும் பூமிக்கும் குறைந்தபட்ச தூரம் சுமார் 5 கோடி கிலோ மீட்டர், அதிகபட்ச தூரம் 40 கோடி கிலோ மீட்டர். பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தூரம் மிகக் குறைவாக இருக்கின்ற சமயத்தில்தான் செவ்வாயை நோக்கி விண்கலம் செலுத்தப்படுகிறது. இதற்குக் காரணம் இதில் பல சாதகங்கள் உள்ளன என்பதே. அந்த வகையில் 26 மாதங்களுக்கு ஒரு முறை இந்த வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்படியான வாய்ப்பு ஏற்படுகிறது. இதைவிட்டால் அடுத்து 2016 ஜனவரியில் தான் இப்படியான வாய்ப்பு கிட்டும். இப்போதுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஆண்டிலேயே மங்கள்யானை செலுத்த இந்தியா முனைப்பாக உள்ளது.
செவ்வாய்க்கு ஒரு விண்கலத்தைச் செலுத்துவதானால் அதற்கு சக்திமிக்க ராக்கெட் தேவை. அமெரிக்கா 2011 நவம்பரில் செவ்வாய்க்கு செலுத்திய கியூரியாசிடி விண்கலத்தை சுமந்து சென்ற அட்லஸ் - 5 ராக்கெட் அப்படிப்பட்டது. அது ஐந்து முதல் 13 டன் எடை கொண்ட விண்கலத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. அந்த ராக்கெட்டில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்சிஜனும் எரிபொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன.
இத்துடன் ஒப்பிட்டால் வருகிற நவம்பரில் இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை செலுத்த இருக்கும் பி.எஸ்.எல்.வி ராக்கெட் குறைந்த திறன் கொண்டதே. அந்த ராக்கெட்டினால் அதிகபட்சம் 1300 கிலோ (1.3 டன்) எடையைத்தான் சுமந்து செல்ல இயலும். ராக்கெட்டின் திறன் குறைவு என்பதால் உயரே கிளம்பியதும் ஒரே பாய்ச்சலில் செவ்வாயை நோக்கிப் பாய்ந்து செல்ல இயலாது.
இதைச் சமாளிக்க பெல் புரூனோ என்ற அமெரிக்க கணித நிபுணர் உருவாக்கிய பாணியிலான சுற்றுப்பாதையைத்தான் பின்பற்ற வேண்டியிருக்கும். அதாவது இந்திய ராக்கெட் உயரே சென்றதும் நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்ற முற்படும். அப்படிச் சுற்ற ஆரம்பிக்கும்போது மங்கள்யானும் ராக்கெட்டும் ஒரு கட்டத்தில் பூமியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டரில் இருக்கும். அப்போது ராக்கெட் எஞ்சினை சில நிமிஷ நேரம் இயக்குவர். இதன் காரணமாக ராக்கெட் சீறிப் பாய்ந்து மறு முனையில் அதிகத் தொலைவை எட்டும். மறுபடி 500 கிலோ மீட்டர் உயரத்துக்கு வரும்போது மீண்டும் ராக்கெட் எஞ்சின் இதே போல இயக்கப்படும். இதனால் மறு முனையில் மேலும் அதிகத் தொலைவை எட்டும். இப்படி ஐந்து தடவை செய்வர். மறு முனையில் ராக்கெட் சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர் உயரத்தை எட்டிய நிலையில் கடைசியாக வேகமாக உந்தப்பட்டு செவ்வாயை நோக்கிப் பயணிக்கத் தொடங்கும்.
ஒருவர் தோட்டத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சலாடுகிறார். ஒவ்வொரு தடவையும் காலை வேகமாக உந்தும் போது ஊஞ்சல் மேலும் மேலும் உயரே செல்கிறது. ஒரு கட்டத்தில் அவர் ஊஞ்சலிலிருந்து ஒரே தாவலில் காம்பவுண்ட் சுவரைத் தாண்டி பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் போய் குதிக்கிறார். மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் பெல் புரூனோ பாதை இப்படிப்பட்டதே.
பத்து மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கி செவ்வாயை சுற்றி வர ஆரம்பிக்கும். சந்திரனுக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் இப்படியான பாதையில் தான் சென்றடைந்தது.
மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் சிக்கிய பின் செவ்வாய் கிரகத்தை மிக நீள் வட்டப்பாதையில் சுற்றிச் சுற்றி வரும். அப்போது அது ஒரு கட்டத்தில் செவ்வாய்க்கு மேலே 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். பிறகு மங்கள்யான் 80,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகிப் போய் விடும். அடுத்த சுற்றில் மறுபடி 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். மங்கள்யானின் சுற்றுப்பாதையை மாற்றி அமைக்க முடியுமானால் அது எப்போதும் சீராக 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி செவ்வாயை நன்கு ஆராய இயலும். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் சுற்றுப்ப்பாதையைத் திருத்தி அமைக்க மங்கள்யானில் போதுமான எரிபொருள் இராது. காரணம் அது வடிவில் சிறியது என்பதே. மங்கள்யானை கூடுதல் எரிபொருளுடன் பெரிய வடிவில் தயாரிப்பதென்றால் பி.எஸ். எல்.வி ராக்கெட்டினால் அதை உயரே கொண்டு செல்ல இயலாது.
கடந்த 2001-ஆம் ஆண்டில் அமெரிக்கா செவ்வாய்க்கு அனுப்பிய மார்ஸ் ஒடிசி என்ற விண்கலமும் ஆரம்பத்தில் மிக நீள் வட்டப் பாதையில்தான் செவ்வாயை சுற்ற ஆரம்பித்தது. அவ் விண்கலத்தில் இருந்த எரிபொருளைப் பயன்படுத்தி அதன் சுற்றுப்பாதை சீராக்கப்பட்டது. பின்னர் அது செவ்வாயை எப்போதும் சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி சுற்றிவர ஆரம்பித்தது. இதனை உயரே செலுத்த, சக்தி மிக்க ராட்சத ராக்கெட் பயன்படுத்தப்பட்டது என்பதால் அதிக எடை உடைய கூடுதல் எரிபொருள் கொண்ட மார்ஸ் ஒடிசி விண்கலத்தை அனுப்ப முடிந்தது
சொல்லப்போனால் மங்கள்யானில் இடம் பெறுகின்ற சில கருவிகளின் மொத்த எடை வெறும் 15 கிலோ. ரஷியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ராக்கெட்டுகளை பெரிய லாரி என்று வர்ணித்தால் இந்திய ராக்கெட் ஒரு சிறிய வேன். இப்படிக் கூறுவது இந்திய பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை மட்டம் தட்டுவதாக ஆகாது.
ஜி.எஸ்.எல்.வி என்னும் பெரிய ராக்கெட்டை தயாரிப்பதில் நாம் ஈடுபட்டிருக்கிறோம். அது மூன்று டன் விண்கலத்தை உயரே செலுத்தக்கூடியது. ஆனால் அந்த ராக்கெட்டை உருவாக்குவதில் இன்னும் முழு வெற்றி கிட்டவில்லை. ஆகவேதான் மங்கள்யானை நம்மிடம் உள்ள சிறிய ராக்கெட்டின் திறனுக்கு ஏற்றவகையில் சிறியதாகத் தயாரிக்க வேண்டியதாயிற்று. இந்த ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டைவிட மேலும் திறன் கொண்ட ராட்சத ராக்கெட் ஒன்றும் உருவாக்க்கப்பட்டு வருகிறது. அதை உருவாக்கி பல தடவை சோதித்து வெற்றி கண்ட பின்னர் செவ்வாய்க்கு நாம் நிறைய எடை கொண்ட மேலும் நிறைய கருவிகளையும் கொண்ட பெரிய மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்துவதில் ஈடுபட்டிருக்கலாம். அதை விட்டு அவசர அவசரமாக சிறியதொரு விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்புவதில் அர்த்தமில்லை. செவ்வாய்க்கு எதையாவது ஒன்றை இப்போதே அனுப்பி ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.
ஆனாலும் சிறிய விண்கலத்தாலும் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்ய இயலும் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
1958-ஆம் ஆண்டில் அமெரிக்கா அனுப்பிய எக்ஸ்புளோரர் -1 என்னும் மிகச் சிறிய (எடை வெறும் 13 கிலோ) செயற்கைக்கோள்தான் பூமிக்கு மேலே சுமார் 1000 கிலோ மீட்டர் உயரத்தில் வான் ஆலன் கதிர்வீச்சு மண்டலம் இருப்பதை கண்டுபிடித்துக் கூறியது.
செவ்வாய்க்கு இந்தியா அனுப்பும் மங்கள்யான் விண்கலத்தின் பிரதான நோக்கம் செவ்வாயில் மீத்தேன் வாயு உள்ளதா என்று கண்டறிவதாகும், செவ்வாய்க்கு அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிடி எனப்படும் நடமாடும் ஆராய்ச்சிக் கூடம் ஓராண்டுக்கும் மேலாக செவ்வாயில் அங்குமிங்கும் நடமாடி வருகிறது. செவ்வாயில் மீத்தேன் வாயு இல்லை என்பதாகவே கியூரியாசிடி இதுவரை நடத்திய ஆய்வுகள் காட்டியுள்ளன.
கியூரியாசிடி கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை மங்கள்யான் கண்டுபிடித்து விடுமா என்று கேட்டால் அது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் மங்கள்யான் எதையும் கண்டுபிடிக்காமல் போனாலும் அது ஒரு சாதனையை நிகழ்த்தியதாகவே கருதப்படும். அதாவது சீனாவினால் சாதிக்க முடியாத ஒன்றை இந்தியா சாதித்ததாகிவிடும்.

நன்றி : தினமணி

Wednesday, August 07, 2013

வறுத்தெடுக்கும் பொருள் ஆதாரம்.

மேட்டூர் அணையில் தண்ணி  தொறக்க போறாங்கன்னு தான் தெரியும்.  விதை வாங்க காசு வேணும் என்ன செய்யுறது?  வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் விவசாயின் கேள்வி.

குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்கள் வேறு இருக்கையில் சந்தோஷத்துடன் தான் மேட்டூர் நீர் திறப்பை எதிர்பார்க்கிறார்கள்.

வேறு சம்பாத்தியத்திற்கு வழி இல்லாதவர்களின் நிலைமை அய்யோ மேட்டூர் திறக்க போறான்னே…என்கிற பதைபதைப்பு கட்டாயம் விவசாயம் பண்ண வேண்டிய நிலைமை.

கடந்த முறை விவசாயம் செய்து கடன் வாங்கியவர்களிடம் நாணயமாய் நடந்து கொண்டவர்கள் நாணயமாய் நடந்து கொள்ள வாய்பிருந்தவர்கள் தையரிமாய் இருக்க வாய்ப்பில்லாதவர்கள் தங்கள் வீட்டு பெண்டுகளின்காது கால்களில் கிடக்கும்நகைகளை நம்பவேண்டிய கட்டாயம்.

தங்க வெள்ளி நகையின் விலை ஏற்ற இறக்கங்களினால் அதை வைத்து பணம் புரட்டமுடியாத சூழல்.

தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்ய தயாராகும் விவசாயிகள். நட்டால் ஏதாவது கிடைக்கும் நம்பிக்கையில் ரூபாய்க்கு3 வட்டியோ 4 வட்டியோ பணம் கிடைத்தால் போதும்  வயல் நட வேண்டும்.

தவிர்க்க முடியா குடும்பசெலவுகள் மற்றும் நல்லது கெட்டது செலவுகளில் கைகளில் இருக்கும் கொஞ்ச இருப்பும் கரைந்து போக கடன் கேட்கும் நிலையில் விவசாயி.


கட்டாயம் விவசாயம் செய்தாக வேண்டும் பணம் வேண்டும். அதற்கான ஆதாரம்…..????

Monday, August 05, 2013

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்! (பகிர்வு)

கொள்கை பரப்புதல்' அறிவியல் துறைதான். அதையே முன்னாளில் "கணக்கு' என்ற சொல்லாலும் குறித்தனர். அதிலும் சமயக் கணக்கு என்பது அயிவை, ஆசீவகம், சாங்கியம், சைவம், நிகண்டம், பிரமம், பூத (பௌதிக) வாதம், பௌத்தம் (புத்தி), மந்திரம், வைதிகம், நியாயம், வைசேடிகம், வைணவம் போன்ற பல சிந்தனை வாதங்களைப் பதிவு செய்கிறது மணிமேகலைக் காவியம். "கணக்கர்' எனும் சொல் - மொழி, இலக்கியம், சமயக் கொள்கை பரப்புவோரைக் குறிப்பதாகவே விளங்கிற்று. நீதி இலக்கியங்களான "பதினெண் கீழ்க் கணக்கு' நூல்கள் வேறு என்னவாம்?
ஆசீவகவாதியின் கொள்கையைப் பாருங்கள். வண்மையுடைய நில அணு, நிலம் சேர்ந்து ஆழும் நீர் அணு, குறுக்கிட்டு அசைதலை உண்டாக்கும் காற்று அணு, எரிந்து மேல் நோக்கி எழும் நெருப்பு அணு ஆகிய நான்கும் ஒருவித ஆதியும் அந்தமும் அற்றுவிளங்கும் "பரமாணுக்கள்' என்கிறது. திட, திரவ, வாயு, "பிளாஸ்மா' ஆகிய நான்கு இயற்பியல் நிலைகள் இவை.
ஒவ்வொரு அணுவையும் சிறப்புத் தன்மையுடன் ஆராயாதவர்கள் பஞ்ச பூதங்களையும் அறிய மாட்டார். பூதம் என்றால் பேய், பிசாசு என்று சிறுபிள்ளைத்தனமாக நினைத்துக்கொண்டு இருக்கிறோம். "பொருள்' என்பதே அதன் பொருள். பூத அறிவியலே பௌதிகம். இதனை உணராமல், மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர், ""..ஒரு மயிர் அறியார், சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்'' (மணிமேகலை 27: 148 - 149) என்கிறார் சீத்தலைச் சாத்தனார் ("ஷீர்' - ஸ்ரீதலை சாத்தனார்?). அதாவது தனித் தனி உரோமத்தையும் இழைபிரித்து அறியாமல், மொத்தத் தலைமுடியையும் கொத்தாகப் பார்ப்பது முறை அல்ல என்பது அவர் அறிவியல் பார்வை. அற்புதமான அறிவியல் பகுதிறன் சிந்தனை.
அணுக்கள் ""..ஒன்றி ரண்டாகிப் பிளப்பதும் செய்யா;/ அன்றியும் அவல் (நெல் பதர்) போல் பரப்பதும் செய்யா;/ உலாவும், தாழும், உயர்வதும் செய்யும்..'' (மணிமேகலை 27: 127 - 132). நிலையாக ஓரிடத்தில் நில்லாது. அங்கிங்காக இடம்பெயரும் என்பதே இன்றைய இயற்பு வேதியியலில் "பிரௌனியச் சலனம்'. தாழும், இறங்கும் அலைவு நிலை.
அதுமட்டுமா, கருமை, கருநீலம், பசுமை, செம்மை, பொன்நிறம் (மஞ்சள்), வெண்மை ஆகிய ஆறு நிறங்களின் பிறப்பு பற்றிய செய்திகள் (27: 150-153) வானவில் வண்ணங்களைச் சுட்டுவன அல்லவா? மணிமேகலைக் காலத்தின் ஆசீவக வாத அறிவியல். அதனை இன்றைக்கு மதக்கொள்கை என்று தவிர்க்கிறோம்.
நிகண்ட வாதப்படி, ""காலம் - கணிகம் எனும் குறு நிகழ்ச்சியும், ஏலும் கற்பத்தினெடு நிகழ்ச்சியும்'' (மணிமேகலை 27: 191-192) என்பதில் "கணிகம்' என்பது சிறு இம்மி என்றும், "கற்பம்' என்பது அபிதான சிந்தாமணிப்படி கோடி கோடி கோடி அளவு என்றும் அறிகிறோம். அதனாலேயே "காலம்' என்பது அணு முதல் அண்டம் வரை பரவியது என்னும் கருத்துப் பெறப்படும். இன்றைய நவீன "கால - வெளி' பற்றிய அறிவியல் கொள்கை. இதனை மதத்தோடு பொருத்தி அங்கலாய்ப்பானேன்?
""பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு உரிய'' (27; 257) என்கிறது வைசேடிக வாதம். விஷ்ணு - வைஷ்ணவம் என்ற உரிச்சொல் ஆனது போல, விசேடம் இங்கு வைசேடிக(ம்) ஆயிற்று என்க. அதாவது சிறப்பு வாதக் கொள்கை இது. பொருளின் அளவு மற்றும் குணம் ஆகிய இரண்டுமே ஒரு வேதி வினை நடைபெற அவசியம் என்பதில் மதம் எங்கே இருக்கிறது?
வேதி இயக்கவியல் (கெமிக்கல் கைனட்டிக்ஸ்) படித்தவர்களுக்குத் தெரியும் எந்தவொரு வேதி வினை நடப்பதற்கும் போதிய பொருளும் தரமும் தேவை. அறிவியல் தேட்டத்தின் தொடக்கம் இது அல்லவா?
காலத்தோடு ஒத்து கருத்தான புதுச் சிந்தனைகள் மலரட்டும். அறிவியல் வளரட்டும். தமிழ் தொடரட்டும். மொழி அறிஞர்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். அழியும் மொழிகள் பட்டியலில் இடம்பெறாமல் காக்க இது ஒன்றே வழி.
""யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்' (அகநானூறு 149) என்று எருக்காட்டூர் தாயங் கண்ணனார் பாடுகிறாரே. சேர நாட்டுச் சுள்ளி ஆற்றினில் ரோமானியர் கப்பலில் பொன் கொண்டு வந்து மிளகு வாங்கிச் சென்றனர். யவனருடன் பேரம் பேசி உரையாடி அல்லவா வணிகம் செய்து இருக்க வேண்டும்? அப்படியானால் தமிழின் ஒலிவடிவத்திலும் புதிய சொற்கள் நடைமுறையில் இயல்பாக ஊடுருவி இருக்கும்.
இத்தனைக்கும் கன்னித் தமிழ் மாறாமல் காப்போம் என்று யாரேனும் குறுக்கிட்டுத் தடுத்து இருந்தால் கணினித் தமிழ் என்னவாகும்? சிந்துபாத்தின் லைலா மாதிரி தமிழ்த்தாய், பெட்டிக் குறளையாகவே முடங்கி இருப்பாள்.
அறிவியல் தமிழில் அவசரத் தேவைகளும் நடந்துள்ளன. சொல்லப்போனால், மின்னணு போன்ற பல கலைச்சொற்கள் கொஞ்சம் துல்லியம் அற்ற வகையிலும் உருவாக்கப்பட்டு விட்டன. இன்று மின்சாரம் தாங்கிய அணு ஒன்று மட்டுமா? பாரியான்கள், ஹேட்ரான்களில் எத்தனையோ உள்பிரிவுகள், நுண்துகள்கள், இம்மிகள். நேர் அல்லது எதிர் மின் அணு - அயனி என்பதே இயற்பியல் உண்மை.
ஆங்கிலத்திலும் இதே சிக்கல் உண்டு. "பிரிக்கப்பட முடியாதது' என பொருளில் "அ - டோமாஸ்' என்கிற கிரேக்கச் சொல் அடிப்படையில் "ஆட்டம்' (அணு) பிறந்தது. இன்று அணுவைப் பிரிக்கவும் பிளக்கவும் முடிகிறதே!
அவ்வாறே, காகிதத் துணுக்குகளைக் கவர்ந்து இழுக்கும் அரக்கு, லத்தீனில் கிரேக்கத்தில் "எலக்ட்ரா'. பிரகாசம் என்று பொருள். இதுவே மின் கவர்தலைக் குறிக்கும் கலைச்சொல். "எலக்ட்ரிசிட்டி' (மின்சாரம்), "எலக்ட்ரான்' (மின்னணு) ஆகி, மின்னணுவியல் (எலக்ட்ரானிக்ஸ்) துறையும் ஆயிற்று. அன்றைய அரக்கு எங்கே? நவீன எலக்ட்ரானிக்ஸ் எங்கே?
ஒருமுறை இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தினுள் கழிவறைக்கான இந்தி வாசகப் பலகை கண்டேன். "ப்ரசாதன் கக்ஷ'. அது என்ன, பிரசாதம் தரும் அறையா? பிறகுதான் புரிந்தது, கோயில் பிரசாத(ம்) வேறு. இச்சொல்லில் "த' என்பது இந்தியின் மூன்றாவது வர்க்க எழுத்து. கழிவறைச் சொல்லுக்கோ நான்காவது வர்க்க எழுத்து.
இன்னொரு "நல்ல' சுவையான சொல். நல்ல மிளகு, நல்லெண்ணெய் எல்லாம் உடலுக்கு நல்லவைதாம். அது என்ன, நல்ல பாம்பு? பஞ்சாமிர்தமா தருகிறது? உண்மையில் தெலுங்கு மொழியில் "நல்ல' என்றால் "கரிய' என்றே பொருள். நெடுநல் (நீண்ட இருள்) வாடை, நெடுநல் (நெடிய கரிய) யானை போன்ற சங்க காலக் கலைச்சொற்களுக்கும் தவறான பொருள் கொள்வானேன்?
"பொன்னிக் கரை கண்ட பூபதி' கட்டிய காவிரியின் வட கரைக்கு "கரிகாலக் கரை' என்பதே வழக்கு. கரிகால் சோழன் என்ற பெயரின் அடைமொழியுமே நாம் கொடுத்ததுதான். ""செல்குடி நிறுத்தப் பெரும்பெயர் கரிகால் வெல்போர்ச் சோழன்'' (அக நானூறு -141) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இடையில் "வெல்போர்' ஏன்? அப்படியானால் கரிகால் தனி உரிச்சொல்லோ? கருத்த கால் உடையவன் என்று சொல்லிப் பழகிவிட்டோம்.
"கரி-கால'(ன்) என்பது ஒரு பொருள் குறித்த இருமொழிச் சொல்லாகவும் இருக்கலாம். கால(ô) என்றால் வடமொழியில் கரிய என்று பொருள். இன்றைய கேரளத்தின் மல-"பார்' (பஹார் என்றால் வடமொழியில் மலை), நடு - "சென்டர்' (ஆங்கிலத்தில் மையம்), "கேட்' - வாசல் போன்ற இருமொழிச் சொற்றொடர் அது.
ஆக, ராப்பாடி குடுகுடுப்பைக்காரன், "நல்ல காலம் பொறக்குது' என்று அச்சுறுத்துகிறான். ""உனக்கு கெட்ட காலம் பிறக்கிறது. அதனால் எனக்கு பிச்சை இட்டால் நன்மை உண்டாகும்'' என்கிறானோ என்னவோ? அதுவும் சரியாகத்தான் இருக்கும்.
பூமத்திய ரேகையில் உட்கார்ந்துகொண்டு ""சூரியன் உதிக்கும் திசை கிழக்கு'' என்று பாடம் சொல்லித் தரலாம். துருவப் பிரதேசங்களில் ஆறுமாத காலம் சூரியன் உதிப்பதே இல்லை. உதிக்கிற திசை கிழக்கும் அல்ல. ஆசிரியர் சொல்லித் தந்த முதல் வகுப்புப் பாடத்தை நம் நாட்டில் மட்டும் நெட்டுரு போட்டு ஒப்பிக்கலாம். மதிப்பெண் கிடைக்கும்.
அதிலும் வட துருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் மார்ச் 19 அன்று அடிவானில் சூரியன் உதிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உயர்ந்து எழும். ஜூன் 21 அன்று மட்டும் தலை உச்சிக்கு நேர் மேலாக நிற்கும். செப்டம்பர் 24 அன்று அடிவானில் மறையும். அவ்வளவுதான். அங்கு உதயமும், அஸ்தமனமும் எல்லாம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டுமே.
அதாவது வட துருவத்தில் பகல் என்பது ஆறு மாத காலம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்காதா பின்னே?
அறிவியல் அன்றாடம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. மறுபரிசீலனைக்கு மடை திறந்து விடுவதே அறிவியல் சிந்தனையின் ஆரம்பம்.
வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கு ஏற்ப மொழியியலாரும் தங்களை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு துறைசார் அறிஞர்கள் மட்டும் மண்டிக் கிடக்கும் தனி அறைக்குள் கதவையும் உள்தாள் இட்டு, பல்துறை அறிவுக்கும் "நவதாள்' பூட்டுப் போட்டு அவஸ்தைப்படுவானேன்?
மொழி என்பது வெறும் ஒலியா, எழுத்தா? தொன்று தொட்டு பட எழுத்து, குறியீட்டுத் தமிழி (பிராமி), வட்டெழுத்து, கண்ணெழுத்து தொடங்கி, கணினி வரை தமிழின் வரிவடிவம் மாறி வந்திருக்கிறது. நெகிழும் மொழியே நிலைக்கும். இலக்கணம் என்ற பெயரில் இறுக்கிப் பிடித்தால் நொறுங்கிப் போகும்.
"கொங்குதேர் வாழ்க்கை' என்று சொன்னால் அந்நாளில் மன்னவருக்கே புரிந்தது. இன்று இது என்ன பங்குச் சந்தைக் குறியீடா என்றுதான் நம் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தமிழ் முக்கியம். இன்று நடக்கும் தொழில்நுட்ப யுகத்தின் அறிவியல் தமிழே கால வெள்ளத்தில் தமிழ் மரபாக நிலைக்கும். இதுவரை பதிவாகாத அறிவுச் செய்திகளைத் தமிழில் முன்வைக்க வேண்டும். இயல், இசை, நாடகம் ஆகிய முத்துறைகளுக்கு அப்பால் நவீனத் தொழில்நுட்பங்களையும், அறிவியல் சிந்தனைகளையும் உள்வாங்கிய புதிய இலக்கணங்களும் காலத்தின் கட்டாயம். அதனால் மொழி அறிஞர்களும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
மொழி வளர்ச்சி என்பது வெவ்வேறு காலச் சூழலில் உள்வாங்கிய கலைச்சொற்கள், சிந்தனைகள், கருத்துகளின் சேர்மானங்களைப் பகுப்பாய்வு செய்வதும் ஆகும். வடசொல், திசைச்சொல், திரிசொல் எனப் பல்வேறு கலைச்சொற்களும் காலம் காலமாக தமிழில் கலந்தன. மொழியும் நிலைத்து வளர்ந்தது.
புரட்சிக் கவியே "தமிழ் வளர்ச்சி' வேகத்தில் தகத்தகாயத் தமிழை "(ஸ்)தாபிக்கிறாரே'!

கட்டுரையாளர்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் விஞ்ஞானி.

நன்றி : தினமணி

Saturday, August 03, 2013

புகைப்படதொகுப்பு - பிச்சைகாரர்

ஒரு ஞாயிறு மதியம் தன்னுடைய வசூல் வேட்டை முடித்துகொண்டு காவி வேட்டிபெரியவர்  காசுகள் நிறைந்த தன்னுடைய திருவோட்டை தரையில் வைத்துவிட்டு உட்கார்ந்தார்.

தன்னை சிறிது நேரம் ஆசுவாசப்படுததிக்கொண்டு திருவோட்டில் இருக்கும் காசுகளை எண்ண  ஆரம்பித்தார்.

இரண்டு ரூபாய்நாணயங்கள் ஒரு  ரூபாய் நாணயங்கள் உற்றுபார்த்து கண்டுபிடித்தப்பொழுது உதடுகள் ஒன்றும் அசையவில்லை.


ஐம்பது பைசா நாணயங்களை பார்த்தவுடன்… அம்பது காசெல்லாம் போடுறாங்க..என்று தன்னுள் பேசியப்படி பையில் போட்டுக்கொண்டார்.


அப்பொழுது சுட்டது.










LinkWithin

Related Posts with Thumbnails