Monday, December 28, 2009

தேவ ராஜதந்திரமும் அரக்கமுட்டாள் தனமும்.

மார்கழி மாதம் காலையிலே ஆன்மீக பிரசங்கி ஒருவா் கோவிலில் பிரசங்கம் செய்தார். விரதங்கள் வழிபாடுகள் பற்றிய கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

அதில் தேவர்கள் அமிர்தம் வேண்டி கடலை கடைய ஆட்கள் நிறைய தேவைப்பட்டார்களாம். தேவர்களை விட தாண்டி அரக்கர்கள் நிறையப் பேர் இருக்க அவர்களுடைய சக்தியை பயன்படுத்தி கொள்வதற்காக கடலை கடைந்தவுடன் கிடைக்கும் அமிர்தத்தில் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுகடலை கடைந்தார்கள்.

அமிர்தம் வந்தது. மரணத்தை வெல்லகூடிய அந்த மருந்தை தேவர்கள் மட்டுமே உண்ண விரும்பி தேவர் ஒருவர்பெண் வேடமிட்டு அரக்கர்களை ஏமாற்றி அவர்களே அமிர்தத்தை உண்டதாக புராணம்.

என்ன அநியாயம் ?

அமிர்தம் பாதி என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு பாதி தராமல் ஏமாற்றியது ராஜதந்திரம்.

அதைப்பெறாமல் பெண்பித்தர்களாய் அலைந்து அமிர்தத்தை இழந்தது அரக்கர்களின் முட்டாள்தனம்.

கொஞ்சமும் புரியாமல் அய்யா தாங்கள் இப்போது சொன்ன அல்லது படித்த மேற் சொன்ன கதைக்கு என்ன அர்த்தம் என்று கேட்க...

நல்லது இப்படிதான் நடக்கும் என்பதற்கு உதாரணம் தேவர்களும் கெடுதல் செய்பவர்கள்கெட்டு அழிந்து போவதற்கு உதாரணமாகஅரக்கர்களை காட்டுகிறார்கள் என்று சொல்ல கொஞ்சம் தலை சுற்றியது.

இந்த கதைக்கு வேறு காரணம் ஏதோ இருக்க அவர் அவர்களுக்கு தோன்றியப்படிகாரணங்களை உருவாக்கி கொள்வதுதான் ஆன்மீகமா தெரியவில்லை.

Friday, December 25, 2009

ஓர் மாலைப்பொழுது














வெள்ளை மேகங்கள்

நிறைந்த வானம்

திட்டு திட்டாய்

இடை இடையே

கரு மேகங்களின்

தலைக்காட்டல்

சூரியன் மறைந்து

போன மாலை

காற்றசைவு இல்லா

மரங்களின் இருப்பு

பறந்து போன

காக்கைகள்

பறந்து அமர்ந்த

அத்துப் பூச்சி

இருட்டிய மாலை

இரைத்தேடிய

ஒற்றை கழுகு

Tuesday, December 22, 2009

நாட்டு கோழி

பெரிய இடம் பேரனுக்கு பொறந்த நாள் கொண்டாடினாங்க. குறிப்பிட்ட ஒரு நூறு பேருக்கு வாழ்த்த இல்லீங்க சாப்பிடஅழைத்தார்கள்.

பிரியாணி தயிர்சாதம் இனிப்பு பச்சடி நாட்டு கோழி வறுவல் முட்டை சாப்பாட்டு வகையறா முடிவு செய்யப்பட்டு சமையல்காரர் சமைக்க தேடப்பட்டார்.

சொந்த ஊரில் நன்றாக பிரியாணி செய்பவரிடம் கேட்டார்கள். எப்பா நாலு மரக்கா பிரியாணி...ஒரு மரக்கா தயிர் சாதம்..பாக்கி வகையறா செய்யனும் எவ்வளப்பா கேட்டார்கள்.

சமையல்காரர் ஆயிரம் ரூபா கொடுங்க என்று கேட்க..

இந்தாப்பா நூறு ரூபா புடி வந்து பேசிக்குவோம் .

எப்பங்க சமைக்கனும் கரெக்டா ஞாயிற்று கெழம வந்துருப்பா..

சரிங்க என்று சமையல்காரர் அகல..

ஞாயிறு அன்று பிரியாணி சமைக்கப்பட்டு வீட்டுகாரரிடம் ஒப்படைத்துவிட்டு சமையல்காரர் கிளம்பினார்.

நான் வறேங்க...

எவ்வளோ வாங்கியிருக்க..

நூறு ரூபா கொடுத்தீஙக..

இந்தா பாக்கி நாலு நூறு மடித்து கொடுக்க..

சமையல்காரர் அதிர்ந்து என்னங்க..

வச்சுகப்பா போதும்.

அதெல்லாம் கட்டுபுடியாவது கொடுங்க என்று கேட்க.. ஏதோ வேணுமுன்னா நூறு குறைச்சிகிட்டு பாக்கிய கொடு சார்.

தெரிஞ்சவர் கூப்பிட்டா நீ என்னப்பா இந்தா மேலும் ஐம்பது கொடுக்கப்பட..

என்னமோ போங்க உழைக்கறவனுக்கு காலம் கெடையாது சார் ஏமாத்தறவனுக்குதான் காலம். இன்னம் கொடு சார் என்று கேட்க..

உன்ன வந்து கூப்பிட்டாருல அவர வரசொல்றேன் பேசிகி்ப்பா என்று நகர்ந்தார்.

காசு இருந்து என்ன பண்ண மனசு இல்லயே என்று மனதில் நினைத்தப்படி இடம் அகன்றார் சமையல்காரர்.

Monday, December 21, 2009

காணாமல்போன உயிர்ப்பு










நினைப்பதும்

நடப்பதும்

முடிவுகள் வேறாய்

கிடைக்கும் முன்

முடிவில்

வாழ்ந்த வாழ்வு

கற்பனையாய்

மனதில்

ஏமாற்றமாய்

முகம் காட்ட

கண்களில்

காணாமல்போன

உயிர்ப்பு

விதைத்த நிலம்

பூச்சி விதை

விதைத்தவுடன்

நாட்கள்

எண்ணும் மனது

அறுவடைகாய்

விதைகள் முளைக்கும்

நம்பிக்கையாய்

மனதில்..





Friday, December 18, 2009

ஆடு மாடு பொட்ட போடலாம் ஆனா பொம்பள


பிரசவத்துக்கு போன உன் பொண்டாட்டி என்னய்யா ஆச்சு ?

நேத்து தான் புள்ள பொறந்துச்சு?

அட என்னய்யா..சந்தோசம்.

என்ன புள்ள?

அட போண்ண...பொம்பள புள்ள.. ஏற்கனவே பொறந்ததும் பொம்பள புள்ள..

நான் பாக்கவே போகலண்ண..

என்ன செய்ய போறோம் தெரியலவருத்தமா இருக்கு?

அட ..அட..போன வாரம் உன்னோட ஆடு என்ன குட்டி போட்டது.

அது ரெண்டுபொட்ட குட்டி போட்டுச்சுன்னுசந்தோசமா சிரிச்சுகிட்டே சொன்ன..

முகம் போற பல்லா தெரிஞ்சுது.

இப்பமட்டும் என்ன நீ பெத்த பொண்ணு...முகத்த இவளோ தூக்கி வச்சுட்டு பேசுற...

வருத்தத்த உட்டுபுட்டு போய்யா..போ..புள்ளைய போயி பாரு..

ஆடு மாடு பொட்ட போட்ட சந்தோசமா இருக்கீங்க..நீ சேந்து பெத்து போட்டு உம் பொண்டாட்டிய கோச்சு என்ன பண்ண போற..

எல்லாம் வெவரமாதான் இருக்கீங்க.

Tuesday, December 15, 2009

பெய்த மழை பொய்த்து போன எதிர்பார்ப்பு


இரண்டு மைல்களுக்கு அப்பால் கருத்த மழைமேகங்கள் ஒன்று திரண்டிருந்தன. குளிர்ந்த காற்று வீசியதால்மழை மேகங்களின் நகருதல் மிக வேகமாக இருந்தது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வெள்ளையாய் தெரிந்தது.

அவன் அந்த முதியவருடன் பேசி கொண்டிருந்தான். தம்பி மழை வந்துகிட்டு இருக்கு கிளம்புங்க என்றார்.

அவன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினான். மழை வந்து கொண்டேயிருந்தது. இடையில் ஏரிக்கரை , ஏரிக்கரையின் ஒரு புறத்திலிருந்து மிக வேகமாக மழை வருவதை பார்த்து கொண்டே வண்டியை மிக வேகமாக ஓட்டினான்.

மிக வேகமாக மழை பெய்தபடி வந்துகொண்டேயிருக்க அவன் ஏரிக்கரையின் மறுபுறம் வந்து சேருவதற்குள் மழை அவனை வந்தடைந்தது.

நனைந்து போய் கோவில் அருகில் நின்று கொண்டான்.

நனையாமல் சென்று விடலாம் என்ற அவனுடைய எதிர்பார்ப்பு பொய்த்து போனது.

முயற்சிகள் தோற்கலாம்.

Thursday, December 10, 2009

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....















எதிர்பார்ப்புகள் நிகழாத உறவுகள் அரிது. எதிர்பார்ப்புகள்ஆயிரங்கள் இல்லாவிடினும் அவர்களின் வாழ்க்கை தேவைக்கு தகுந்த மாதிரி எதிர்பார்ப்புகள் அமைவது உண்மை.

சாதாரண மனித அடிப்படை தேவைகளின் எதிர்பார்ப்புகளின் போது தான் அவன் தன்னையே இழந்து வேதனைகளுக்கு உள்ளாகிறான்.

அய்யா பசி என்றவனுக்கு கிடைக்கும் பதில் வார்த்தைகள் ஏளான பார்வையும் உடம்பு நல்லா தானே இருக்கு உழைச்சு திங்க வேண்டியது தானே சரி போ போ இப்பதான் எல்லாம் முடிஞ்சது என்பார்.

உடல் உழைப்பைசெலுத்திவேலையை பார்த்துவிட்டு தன்னுடைய ஊதியத்தை பெறுவதற்காக மணி கணக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?

அவர்களெல்லாம் முதல் ஆள்பவர்கள் முதலாளிகள் என்ன செய்ய ?

ஒருவரை சார்ந்த ஒருவரின் வாழ்வு குள்ளே எத்தனை விதமான எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் ஆகின்றன.

எதிர்பார்ப்புகள் இயல்பானவை என்றால் ஏமாற்றங்கள் இயல்பானவை அதைவிட பாதிப்புகள் மிகுந்த மன வேதனை தருபவை.

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வை எதிர்பார்த்து.....


Wednesday, December 09, 2009

விலை மகளிர் தான் வாடிக்கை.



கல்வி உதவிதொகை வாங்குவதற்காக வருமான சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர் நின்றான் அந்த சிறுவன்.

சார் இந்த பையனுக்கு குறைந்த வருவாய் போட்டு வருமான சான்றிதழ் கொடுங்க சார் என்றார் உதவியாளர்.

கஷ்டப்படுற பெரியகுடும்பம் சார் புள்ளங்க நிறைய பாத்து போட்டு கொடுங்க சார் என்று மேலும் கூறினார் உதவியாளர்.

யோவ்..அவன் அவன் பெத்து போட்டு போயிடுவான் அதுகெல்லாம நாம சர்டிபிகேட் தர முடியுமா.போ..போ..போயிட்டு அப்புறம் வர சொல்லு என்றார் கிராம நிர்வாக அலுவலர்.

மனதில் நொறுங்கி போனான் சிறுவன். அய்யோ என்ன இப்படி பேசிகிறார் என்று எண்ணியவாறு அண்ண சர்டிபிகேட் கொடுப்பாரா என்றான் உதவியாளரிடம்.

நீ போ நான் வாங்கி தர்றேன் என்றார்.

மனதில் தன் நிலைமையை நினைத்தவாறே வீடு திரும்பினான்.

இரவு பத்து மணி நல்ல குடிப்போதை ஏறியவுடனே பெண் சுகம் வேண்டும் அவருக்கு பேருந்து நிலையத்தில் நிற்கும் விலை மகளிர் தான் வாடிக்கை.

அன்றும் அப்படி தான் மதுவின் கிறக்கத்தில் விலை மகளிர் என குடும்ப பெண்ணை விபசாரத்திற்கு அழைக்க

எலா யார கூப்பிடற என்ற அந்த பெண் செருப்பை கழட்டினாள்.

யாரோ இவரை தெரிந்தவர் போய் தடுத்து அழைத்துப்போனார்.

வேறு யாருமல்ல மேற் சொன்ன கிராம நிர்வாக அலுவலர் தான்இந்த பெருமைக்கு உரியவர்.

இப்படியும் மனிதர்கள்.

Monday, December 07, 2009

காணாமல் போன பாம்பு






குளம் குளத்தின் ஓரமாய் சென்ற வாய்க்கலின் தினமும் இறங்கி கால் அலம்பும்இடம் அருகே பாம்பு ஒன்று காத்திருக்கும் தன்னுடைய இரைக்காக அங்குள்ள கல்லின் மீது தன்னுடைய உடலை சுருட்டியப்படி தலையை தூக்கியவாறு நிற்கும்.

நடக்கும் சத்தம் கேட்டவுடன் ஓடி மறைந்துவிடும். தினசரி பார்வையில் படும் அதைப்பற்றிய பயம் இல்லாது வாய்க்காலுக்கு வருவதும் போவதுமாக இருந்தேன்.

ஒருநாள் இன்னொரு பாம்பை பார்த்தேன் தலையை மட்டும் தண்ணீரின் வெளியே நீட்டியப்படி நின்றது. சத்தம் கேட்டவுடன் தலையை உள்ளுக்குள் இழுத்தப்படி மறைந்தது.

மறுநாள் செல்ல அந்தபகுதி வந்தவுடன் மனது மிகுந்த எச்சரிக்கை உணர்வை ஏற்ப்படுத்தியது. கண்களை உன்னிப்பாக்கி அந்தபகுதி யை ஆராய்ந்தப்படியேச் செல்ல முதல் நாள் தண்ணீரில் மறைந்து காணாமல் போன பாம்பு இன்றும் இரைக்காக படுந்திருந்தது தன்னுடைய நீண்ட உடலை சுருட்டியப்படி தலையை மேல் நோக்கியே வைத்திருந்தது.

சத்தம் கேட்டவுடன் மெதுவாய் ஊர்ந்து அருகில் இருக்கும் வளைக்குள் தன்னை இருத்தி கொண்டது. இரண்டு அடிகள் முன்னோக்கி ச்செல்ல அடுத்த பாம்பு வரவேற்றது வழக்கம் போலவே அதுவும் நகர்ந்து செல்ல மனது பயப்பட ஆரம்பித்தது.

அன்று முதல் அந்தபகுதி வந்தவுடனே மனதின் பரிதவிப்பு தொடங்கிவிடும். பயமும் எச்சரிக்கை உணர்வும் கலந்த கலவையாக அந்தபகுதிக்கு செல்வது போவதுமாக இருக்கபாம்பு குடும்பம் தொடர்ந்து அந்தபகுதியில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தது.

Friday, December 04, 2009

சரிதானா?
















எண்ணங்கள்

தோன்றா மனது

பெரிய சுமையாய்

என்னுள்ளே

அறியாது

புரியாது

ஒன்றுமே இல்லாது

மார்பின் மையம்

சுமையாய்

மனம் என்ன?

எண்ணங்கள் என்ன?

குழப்பமில்லை

மகிழ்ச்சி இல்லை

மார்பின் மையம்

சுமையாய் இருக்க

எண்ணங்கள் தோன்றா

மனது சரிதானா?


Tuesday, December 01, 2009

அவரும் அப்படிதான்


தொழில் சார்ந்த வெற்றிகள் ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை சமுதாயத்தில் நிலைத்திட செய்யும். தோல்விகள் அவர்கள் வாழ்ந்த சூழலைப் பாதித்து மனதிற்கும் வாழ்க்கைக்கும் பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைத்துவிடும்.

தொடர் போராட்டமாய் வாழ்வு தொடர் வெற்றிகளும் தொடர் தோல்விகளும் காலங்கள் தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

வளர்ந்த சூழல் வாழ்வு அமைந்த விதம் அவ்வப்போது மேலும் வளர ஊக்குவிப்பவர்கள் அமைந்த வாழ்க்கை வெற்றிகரமான வாழ்வாக மலர்ந்து விடுகிறது.

சூழல் சரியாக அமையாதவர்களின் வாழ்வு அவ்வளவாக மலர்ந்து விடுவதில்லை.

அவரும் அப்படிதான் தந்தை விட்டுப்போன தொழில் நன்றாக செய்தார்கள் நன்றாக செழித்து வளர்ந்தது. வசதி மேம்பாடு அவரை யாராவது மதிய வேளைகளில் சாப்பிட கூப்பிட்டால் ஏ.சி. அறையில் தான் நான் சாப்பிடுவேன் என்பார். அப்படியே செய்தார் தானே தொழில் சிறந்தவன் என்று மார்தட்டவும் தவறவில்லைதான் அவர்.

ஆரம்பிக்க கூடாத இடத்தில் கடை ஆரம்பித்தார் பெரும் செலவு செய்து ஆரம்பித்த கடை சரியானப்படி கல்லா கட்டவில்லை. விட மனமில்லாமல் தொடர்ந்து நடத்தப்போய் பெரும் நட்டம் வந்தது இருந்த தொழிலும் கைவிட்டு போனது. பெரும் கடன் வந்தது.

வாழ்ந்த விதம் சமாளிக்க முடியாமல் குடும்பம் நிர்வாகமே நடத்த திறமையின்றி போனார். மனைவி பிள்ளைகள் பிறந்த இடம் சென்றனர். இவரது அண்ணன் வீட்டில் இவரது சாப்பாடு என்று ஆனது.

எங்கு சென்றாலும் கார் தான் என்று இருந்தவர் தன்னுடைய பிள்ளைகளின் சைக்கிளை ஓட்டி கொண்டு இருக்கிறார்.

வெளியில் அதிகம் செல்வது கிடையாது. செய்த தொழில் அவ்வப்போது கிடைக்கும் கமிசன் தொகையில் தான் அவரது வாழ்வு. பல லட்சங்கள் கடனாளியாக இன்னமும் நகரத்தின் வீதிகளில் அவர்.

அவரை தெரிந்தவர்கள் அய்யோ பாவம் என்று சிலபேர் இவனுக்கு வேணும் என்று சில பேர் காதுபடவே பேசி…

Sunday, November 29, 2009

உன்னோடு என் கோபம்





















உன்னோடு கோபம் கொண்ட நாள்முதலாய் என்னுடைய எண்ணங்களை ஆராய்கிறேன். செயல்களில் தடங்கல்கள் இல்லை. ஆனாலும் மகிழ்ச்சியாகசிரிக்க முடியாது தடுக்கும் உனது எண்ணங்கள்.

உனைவிட்டு விலகி நிற்க முற்ப்பட்டு உன்னுடைய நினைவுகளினால் உண்டான தாக்கம் களையமுடியாது தவிப்பது உண்மை.

உனது செயல்கள் உனது விருப்படியே அமைய வேண்டும் என்பதற்காக உனது வாதம் அது தவறாக இருந்தும் அதை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனதை என்னவென்று சொல்வது.

நான் நானாய் இருக்க நல்ல உறவு அவசியம். சீர் கெட்ட உறவுகளில் எங்கே அமைதி?

நீயாய் புரிந்து கொள்ளும் வரை உன்னோடு என் கோபம் நிரந்தரமானது.

Saturday, November 28, 2009

உடலின் உள்ளே...

Tongue with taste bud

Human egg with coronal cells

Villi of small intestine


Blood clot

Lung cancer cells

Wednesday, November 25, 2009

பொருள் இல்லா பொருள் தேடுபவர்கள்



















நன்மையில்

லாப நோக்கு

பொருள் இல்லா

பொருள் தேடுபவர்கள்

சேர்த்த பொருள்

வியாபார தந்திரமாய்

வார்த்தைகள்

வறுமை போயிடும்

வளமை வந்திடும்

போட்ட பொருள்

அனுபவம் இல்லா

அனுபவத்தில் உள்ளவர்கள்

சொன்ன வார்த்தைகள்

நம்பிக்கை

நம்பிய மனது

எண்ணிய எண்ணம்

பொருள் போனது

வளமை போனது

வறுமை வந்தது

நம்பிக்கையே

வாழ்வாய்..

நம்பியும் நம்பாமலும்


பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை செய்து குழந்தை பிரசவிக்கபட்டது. பிறந்த குழந்தை பசி தாய்பாலுக்கு அழுதது.

தாய்க்கு தெரியவில்லை. வீறி்ட்டு அழுதப்படியே இருந்தது சிசு. சில மணி நேரங்கள் ஆனது எதற்காக அழுதது என்று கண்டுபிடிக்க அதற்குள் நிலைமை அபாயத்தை தொட்டிருந்தது.

தொடர்ந்து அழுததால் பிள்ளை தொண்டை கட்டி போயிருந்தது. சுவாசம் சரியி்ல்லாமல் போய் காலையில் பிறந்த குழந்தை மாலை இறந்தது.

உடனே தாய்பால் கொடுக்க வேண்டியது தானே என்று தாயிடம் கேட்டால் டாக்டர் ஒன்றும் சொல்லவில்லை அதனால் கொடுக்கவி்ல்லை என்று காரணம் சொல்லப்பட்டது.

ஆனால் தன்னுடைய அழகு கெட்டு போய்விட கூடாது என்பதற்காக அவள் தாய்பால் கொடுக்கவி்ல்லை என்று வெளியில் பேசப்பட்ட காரணமாக இருந்தது.

சிசு இறந்தது உண்மை ஆனால் காரணம்….

Friday, November 20, 2009

புது மாப்பிள்ளை மிடுக்கு

அவர் போட்டிருந்த வெள்ளைசட்டையின் மேல் பட்டன்கள் நெஞ்சு தெரியும் வரை அவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இதுவரை அவர் அணிந்த சட்டைகளின் மேல் பட்டன்களை அவிழ்த்து விட்டதில்லை. அன்றைக்கு அவரினுடைய அந்த செய்கை மிகவும் விகாரமாய் பட்டது.

அவரை தினமும் பார்த்த கண்களுக்கு இன்றைக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறார் தெரியவில்லை? என்ற கேள்வியினை தடுக்க முடியவில்லை.

அதற்கு பிறகு வந்த நாட்களிலும் மேல் பட்டன்களை அவிழ்த்து விடாது சட்டை அணியவில்லை. பேச்சினுடைய தொனியும் மாறியது.

என்னடா இவருக்குவந்த வாழ்வு...கல்யாணம் பண்ணியவுடன் ஆள் மாறிவி்ட்டாரே ...

நீ வேற புது வண்டி கழுத்துல மின்னுது பாத்தியா நாலு பவுன் செயின் அதான் காரணம் அவரு மாற என்று நண்பன் சொல்லியது காதில் ஒலித்தது.

Sunday, November 15, 2009

இல்லாமல் இருந்தபொழுது


கஷ்டபட்ட குடும்பம் கால சுழற்சியில் மேல் எழுந்தது. மற்ற குடும்பங்களை தாண்டி முன்னோக்கி சென்றது.

மனிதர்களின் குணமும் மாறத் தொடங்கியது. மற்றவர்களுக்கு உண்டான மரியாதை உறவுகளுக்கான மதிப்பு குறையத் தொடங்க முடிந்தவர்கள் தாங்கி கொண்டார்கள். முடியாதவர்கள் உள்ளுக்குள் குமைந்தார்கள்.

அவர்களின் காலம் இருப்பவர்கள் அள்ளி முடியலாம் அள்ளி முடிந்து கொண்டார்கள்.

இல்லாது இருப்பவர்களை பார்த்து எள்ளினார்கள்.

இது அவர்களின் காலம்.

இல்லாமல் இருந்தபொழுது இருப்பவர்களால் இவர்களும் எள்ளி நகையாடப்பட்டவர்கள் தான்…….

Saturday, November 14, 2009

எனை கடந்து















பின்னோக்கி

இழுக்கபட்ட மனது

மழை பெய்த

மாலை

வீடு திரும்பும்

பள்ளி சிறுவர்கள்

மழையில் நனைந்தப்படி

வரும் திசை

நோக்கிய கண்கள்

நான் நிற்கையில்

வாடிக்கையாய்

எனை கடந்து

செல்பவர்களின் நினைவு

வளர்ச்சியை நோக்கிய

மாற்றங்களில்

வேறு இடம் நகர்ந்து

காணாமல் போனவர்கள்

நான் நிற்கிறேன்

புதியவர்கள்

எனை கடந்து செல்கிறார்கள்.

Sunday, November 08, 2009

பெண்-4- அத்தினி


கால்களை உதறி உதறி நடக்கின்ற நடையினையும் மேலுயர்ந்து வளைந்து தடித்த நீண்ட விரல்கள் பொருந்தியுள்ள பாதங்களையும் நடுக்கம் அமைந்த பேச்சினையும் குட்டையான கழுத்தினையும் அடர்த்தியற்று சிதறிய செம்பட்டை மயிரோடு தோன்றும் கூந்தலையும் உடையவள் தீமைபயக்கின்ற இயல்புகளையுடையதான தொழில்களையே எப்போதும் செய்கின்ற வழக்கமும் நாக்குக்கு எரிப்பும் துவர்ப்பும் பெரிதும் விருப்பந்தருவதாயிருக்கின்ற தன்மையும் அவள் உண்பதைகாணும் பிறபாவையர் எல்லாம் அச்சங்கொள்ளுமாறு உண்ணும் இயல்பும் உடையவள். நாணத்தை அறவே கைவிட்ட இயல்பும் உடையவள்.

இது அத்தினி வகை.

Wednesday, November 04, 2009

இருந்தும் நிகழ்வுகள் இல்லாமல்




















சகமனிதன்

ஒருவனின் திருமணம்

இரண்டு மூன்று

நாட்களாய்

மீதம் இருக்கையில்

திருமணத்திற்கான

இறுதி வேலைகள்

ஆளக்கொரு பக்கமாய்

விரைவாய் வந்த

செய்தி

திருமண பெண்

ஓடினாள்

தன் காதலனுடன்

வாழ்த்துகள்

வாங்க கொடுக்கபட்ட

அழைப்பிதழ்கள்

வெறும் காகிதமாய்

நிகழ்ச்சிகள்

இருந்தும் நிகழ்வுகள்

இல்லாமல்

அவரவர்களின் மனவேதனை

சுகமாய் நினைக்க

சோகம் தன்னை

வெளிப்படுத்திய விளைவாய்..

பெண்-3- சங்கினி


உயரமும் பருமனும் என்றில்லாமல் நடத்தரமாக விளங்குகின்ற அழகுடன் எல்லா உறுப்புகளும் சம நிலையிலே அமைந்து கவர்ச்சி மிகுந்த உடலமைப்பும் நடந்து போகின்ற போது பூமியிலே பதிக்கின்ற காலடிதடங்கள் அகன்று பதியுமாறு செல்லும் நடையும் சிறப்பு மிகுந்த நரம்புகள் புடைத்த மேனியிலே தோன்றுகிற வளமான கட்டுடல் அமைப்பும் கொண்டவள். சமைத்த உணவுகளைக் கூடுதல் குறைதல் இன்றி சம்மாக அருந்தும் தன்மையும் அமைந்தவள்.

சிவந்த மலர்களால் தொடுக்கபட்ட மலர்களையும் சிவந்த நிறம் பொருந்திய ஆடைகளையும்தன் மனத்திலே ஆர்வமுடன் விரும்புகின்ற தன்மையும் கோபப்பட வேண்டாததற்கெல்லாம் அடிக்கடி கோபப்படும் இயல்பும் பொய்ம்மையும் கோட் சொல்லுகையும் கொருந்தியிருக்கின்ற நாவும் உடையவள். வஞ்சகம் பொருந்திய மனத்தினையும் நாளுக்கு நாள் பித்தம் வளர்த்து பெருகும் உடலும் வெஞ்சினகொண்ட கழுதையினைப்போல உரத்துக் கொடூரமாக கத்துகின்ற கடுஞ்சொல்லும் அச்சம் என்பதே சற்றுமில்லாது உள்ளமும் சமூக மரபுகளை மதியாது நடக்கும் தன்மையும் உடையவள்.

இது சங்கினிவகை.

Thursday, October 29, 2009

பெண்-2- சித்தினி

பிடியானைப்போலும் என்று உவமிக்குமாறு நடக்கும் தளர்ந்த அசைந்த நடையும் பெண்மையின் பண்புகள் மிகுதியாக அமைந்திருக்கின்ற பண்பும் மென்கொடி போலத்தளர்ந்து ஓசிகின்ற அழகுமிக்க திருமேனியும் வலம்புரிச் சங்கு போன்று விளங்கும் கழுத்தும் எப்போதுமே நன்மை விளைவிக்க கூடியதான சொற்களை பேசும் இயல்பும் நடனம் இசை ஆகிய கலைகளில் ஈடுபாடும் உயர்ந்த இதழ்களும் உயரமோ குட்டையோ என்று சொல்ல இயலாதபடி நடுத்தரமாக விளங்கும் தோற்றமும் சுருக்கமாக உண்ணும் இயல்பும் இனிமையான சுவைப் பண்டங்களை விரும்பும் விருப்பமும் சித்திர வேலைப்பாடுகளில் நிறைந்த ஆடைகளை விரும்பும் தன்மையும் உடையவள்.

இது சித்தினி வகை.

Tuesday, October 27, 2009

பெண் -1- பத்மினி

பெண்களில் நான்கு வகை பத்மினி , சித்தினி , சங்கினி , அத்தினி என்று வகைப்படுத்தபட்டுள்ளனர்.

செண்பக மலரோ என்று சொல்லும்படியான சிவந்த மேனி வண்ணமும் பண்பட்ட சொற்களையே பேசும் இயல்பும் எப்போதும் பொய்மையே கலவாத வாய்மையும் பிறர் கண்பார்வையிலே வீழ்ந்தரியாத கானகத்து மானைப்போன்ற மிரண்ட சுபாவமும் உடைய மாதர்கள்.

அறிவழகு உடையவரான சான்றோரையும் வேதசாஸ்திர விற்பன்னர்களையும் பல பல தேவர்களையும் உள்ளத்து அன்புடன் பணிந்து போற்றும் பக்தியும் எள்ளுச் செடியிலே விளங்கும் புத்தம்புது மலர் போன்று விளங்கும் மூக்கினையும் நடைபழகும் பிள்ளைப்போல வெள்ளையன்னம் போன்று தளர்ந்தசையும் நடையும் வெண்மையான மெல்லிய ஆடைகளிலும் வெண்மையான மலர்களிலும் விருப்பம் தூயதும் இனிய சுவை நிறைந்ததுமான உணவினைச் சிறுகவே உண்ணும் இயல்பும் ஒளிரும் வாள் போன்ற ஒளி வீசும் நெற்றியுடையவள்.

இது பத்மினி வகை.

அவனின் நினைவுகளால் அவள் …




















சொன்னவன் சொல்லி சென்றவன் அவன் நினைவுகளை என்னோடு விட்டு சென்றவன். அவனின் நினைவுகளால் அவன் இல்லா நேரங்களை சமன் செய்ய தூரம் சென்றவனின் முகம் வாட்டி வதைக்க வாடிநின்றவளின் முகம் வேதனைகளை வெளிப்படுத்தியது.

அவனோடு உரையாட எதிர்பார்த்தவளின் பரிதவிப்பு ஒற்றைகால் கொக்காய் அவனின் வருகை நோக்கி என்னுடைய எதிர்பார்ப்பு.

வந்தவன் வரும்போதே கண்களால் பேச அர்த்தங்களை அகராதியில் தேடியப்படியே என்னிடம்அவனதுஉரையாடல் நேரங்களால் நிரம்பிபோன மனது.

நிரம்பியமனது உரையாட வார்த்தைகள் இல்லாது பிரிய எத்தனிக்க பிரிந்து போய் திரும்பவும் பேச எத்தனித்த என் மனது. அவனின் மனதும் .

தனிமையின் இருப்புகளில் ஒருவரோடு ஒருவர் மனதுகளில் உரையாடியப்படியே செயல்கள்பைத்தியம் .

அவனின் நினைவுகளால் நான் …

Friday, October 23, 2009

அவனுக்கு ஆள் இல்லாமல்

மனமலர்ச்சியை முகம் காட்டதவறியது. முகம் இறுக்கமடைந்து காணப்பட்டது. எந்த விதமான உணர்ச்சியும்பிரதிபலிக்காது ஓர் உயிர்ப்புக்கான இலக்கணம் இல்லாமல் இருந்தான்.

சிடுமூஞ்சி , அவன் பேச சிரிக்ககாசு கேட்பான்டா என்பார்கள். அவனுடைய மன இறுக்கத்துக்கு அவனுக்கு மட்டுமே தெரிந்த காரணமாக விசயங்கள் இருக்கவே செய்தது. இவர்கள் வாழ்க்கையில் நடந்தது அவனுடைய வாழ்க்கையில் நடக்காதது தான் காரணம். எல்லோர் போலவும் சிரிப்பான் அழுவான் கோபம் கொள்வான் அவனும் உயிர்ப்பு தான்.

அவனுடைய வாழ்க்கையில் நடந்தவைகள் சுற்றமும் உறவுகளும் அவனை நடத்திய விதம் ஏன் நமக்கு மட்டும் இப்படி ? என்ற கேள்வியே அவனை சிரிக்க விடாமல் செய்தது.

வழிநடத்த அவனுக்கு ஆள் இல்லாமல் போனதால் அவனுடைய அறிவுக்கு அவன் விசயங்களை எடுத்து கொண்டவிதம் ஒரு நூறு சதவீதம் உண்மையானதாகவே இருந்தது.

Sunday, October 18, 2009

“ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ”


அன்றைய தினம் அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். விசயம் என்னவென்று விசாரிக்க அவனுக்கு முப்பதாயிரம் பணம் தேவை. திடீர் தேவைக்கு அணுகிய இடத்தில் தருகிறேன் என்று சொல்லி தரமுடியாமல் போய்விட்டது.

இவன் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாற்றம் அடைந்தான். மனதில் சோர்வும் வந்தது. அடுத்த முயற்சியை

ஆர்வம் இல்லாமல் மேற்கொண்டான். அதுவும் தவறிபோக அடுத்த முயற்சி்க்கான செயலை செய்ய துணிவில்லாமல் இருந்தான்.

ஒரு நாள் காலை கோவிலுக்கு போயிருந்தான் அங்கு துண்டு வாசகம் அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். “ முயற்சிகள் தோற்கலாம் முயற்சிக்கத் தவறலாமோ? ” என்று இவனுக்குள் சிறிய மாறுதல்.

அந்த வாசகத்தை ஏற்றுகொண்டதாய் அவன் முகம் உணர்த்தியது.

Tuesday, October 13, 2009

இயல்பாய் மாற்றம்

















பார்த்த வரை

இருள்

கேட்ட சத்தமாய்

குயில் கூவல்

பூக்க தயாரான

மொட்டு

இருப்பிடம்

விட்டு அகலும்

உயிர்ப்புகள்

விலகிய இருள்

சூரிய வருகை

காந்திருந்த பூமி

இயக்கம் மாற்றம்

தோற்றம்அழிவாகி

அழிவு தோற்றமாக

இயல்பாய் மாற்றம்

பிரபஞ்சம்.





Monday, October 12, 2009

சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள்

கண்முன் விரிதிருந்த இயற்கையின் நீண்ட பரப்பு மறையும் சூரியன் வயலின் மேற்பரப்பில் பறந்த நூற்றுகணக்கான தட்டான்கள் எதிர் எதிர் திசையில் தன் இருப்பிடம் திரும்பும் காக்கையும் கொக்கும் அங்கும் இங்குமாய் வெள்ளைமேகங்கள் வானத்தில் நகர என் மனது மட்டும் வாழ்க்கை நிகழ்வுகளின் பிடியில்சிக்கி வெளிவர மறுத்தது.

தட்டான்களின் சுதந்திரம் பறவைகளின் சுதந்திரம் என் மனதை சிறிது அசைக்க பார்வைகள் நிலை குத்தி மனது அப்படியே இருக்க இயற்கையோட ஒன்றினைந்தேன். கால அளவு தெரியாமிக சிறிய நேரம் இணைந்து வெளிவந்து நான் மனிதன் அது இயற்கை என்று ஆனேன்.

திரும்பவும் மனிதன் வளர்த்த சமுதாயத்தின் கோரபிடிக்களுக்குள் சிக்கி கொள்ள பயணமானேன்.

Saturday, October 10, 2009

தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம்

ஈழத்தமிழர் நிலையை நேரில் கணடறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை பயணம். அதுவும் அதிபர் ராஜபக்சே அழைப்பை ஏற்று இலங்கைக்கு பயணம்.

தமிழக எம்.பி.க்கள் குழு பயணத்தினால் துயரப்படும் இலங்கை தமிழர்களுக்கான தீர்வுஎன்ன கிடைத்துவிடும்.

இலங்கை தமிழர்களின் துயரத்தை வெளிப்படுத்தாத ஊடகங்கள் இல்லை எழுதாத பத்திரிக்கைகள் இல்லை.

அரசாங்க ரீதியான இந்த தமிழக எம்.பி.க்கள் குழு என்ன செய்து விட முடியும்.

மூடியிருந்த கண்களை மேலும் கருப்பு துணியை கட்டி தன்னுடைய இன துஷ்பிரயோகங்களை காணவிடாதபடி தடுக்கதான் தமிழக எம்.பி.க்கள் குழுவை ராஜபக்சே அழைத்துள்ளார் போலும்.

அனுப்பிய முதல்வருக்கு வெளிச்சம் அழைத்த ராஜபக்சேவுக்கு வெளிச்சம்.

Thursday, October 08, 2009

குடும்பம் சுமப்பவன்




















குடும்பம்

சுமப்பவனுக்கு

கோபம் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

உணர்வுகள் கிடையாது

குடும்பம்

சுமப்பவனுக்கு

ஆசைகள் கிடையாது

குடும்பம் சுமப்பவனுக்கு

குடும்பமே கிடையாது

காசு இல்லா

நடுத்தர குடும்பம்

சுமப்பவனுக்கு..

Tuesday, October 06, 2009

ஆளக்கொரு பக்கம்



மிகுந்த சிரமமத்திற்கு இடையே குடும்பத்தை வழி நடத்தினான். ஆகா..ஓஹே..என்று இல்லாவிட்டாலும் பிற மனிதர்கள் குறை சொல்லாத அளவிற்கு குடும்ப நிர்வாகம் செய்தான்.

ஆளக்கொரு பக்கம் வசை பாடவே செய்தார்கள் இவன்பொறுத்துகொள்வான். ஆனால் வந்தவள் உள்ளுக்குள் கோபபட்டாள் இரவானதும் இவர்கள் திட்டினார்கள் உங்களை எப்படி திட்டலாம் என்று கேட்க அவன் படும் சிரமங்கள் அவனுக்கு தெரியும். அதனாலயே இவனுக்கு உள்ளுக்குள் கோபம் கிளம்பும்.

மனைவி மீது எரிந்து விழுவான் ஆமா..நான் எத சொல்ல வந்தாலும் ஏன் என்னகிட்ட பாய்றீங்க..எனக்கு நேரா உங்கள சொல்லறது பொறுத்து கொள்ள முடியல அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்.

நீ சொல்வது சரிதான் அந்தமாதிரி சொல்லாத புள்ள. நீ சொல்ல சொல்ல அவங்க மேல கோபதான் அதிகம் வரும். குடும்ப உறவுல இதெல்லாம் சகஜம் என்பான். நீ ஊமையா இருந்துக்க வேண்டியது தான் என்று அவள் வாயை மூடினான்.

Friday, October 02, 2009

படைத்தவனா… ? படைப்புகளா…?


படைப்பவன் யாராயிருந்தால் என்ன? படைப்புகள் எதுவாயிருந்தால் என்ன? சராசரி மனிதன் உருவாக்கிய படைப்புகளாகட்டும் அல்லது கடவுள் ஆகட்டும் (இது அவர் அவர்களின் நிலைப்பாட்டுக்குட்பட்டது) வெளிவரும் அல்லது உருவாக்கப்படும் படைப்புகளுக்கு உண்டான மரியாதை என்பது அதை போற்றி பாதுகாக்கும்பொழுதேபடைத்தவனை நினைக்கிறோம்.

எடுத்துகாட்டாக மகாகவியின் படைப்புகளை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்தான் மகாகவி பாரதி இன்னமும் நாம் நினைவுப்படுத்தி கொள்கிறோம்.

அதுபோல் கடவுள் படைத்த படைப்பு எதுவாக இருந்தாலும் அதன் விதிகளுக்குட்பட்டு அதை பாதுகாக்கும்பொழுதே கடவுளை வணங்குவதற்குரிய தகுதியை நாம் பெறுகிறோம்.

படைத்தவனா… ? படைப்புகளா…?

அன்பிலும் தோற்கிறேன்




















அன்பிலும் தோற்கிறேன்

யாரிடமும் நெருங்காது

இருக்க..

நெருங்கியதால் நெருங்க

எதிர்பார்ப்பு என்பது

அன்பு

உண்மையான அன்பாய்

நான் இருந்தேனா காலம்

சொல்லும்

அன்பு கிடைத்ததாய்

நான் உணர என்னில்

பிரதிபலிப்பு

மிக உண்மையாய்

அன்பிலும் தோற்கிறேன்

என் காதலனே…

Thursday, October 01, 2009

“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….”


“படைத்தவனை வணங்கு படைப்புகளை வணங்காதே….” படித்த வாசகம். இது எந்தளவிற்கு உண்மை மிகவும் முரணான வாக்கியமாக தென்பட்டது.

படைப்புகளை வணங்கதாவர்கள் படைத்தவனை வணங்க முடியுமா. படைப்புகளின் முக்கியதுவம் உணர்ந்து போற்றுபவர்கள் படைத்தவர்களை வணங்க முடியும் அவர்களின் படைப்புகளை பாதுகாக்கும் தகுதியும் அப்பொழுது தான் உருவாகும்.

படைப்புகளின்அவசியத்தையும் முக்கியதுவத்தையும் உணராது படைப்பவர்களை மட்டுமே பார்ப்பவர்களால் அந்தநேரம் அவர்களை பாராட்டலாம் எந்த காலமும் அவர்களின் படைப்புகளை பாதுகாப்பவர்கள் என்று சொல்லிவிடமுடியாது.

இந்த வாக்கியத்தையே “ படைப்புகளை ஆராய்ந்து அறி படைத்தவர்களை நினை ..” மாற்றி அமைத்து கொள்ளலாம்.

Monday, September 28, 2009

குடும்ப போர்


அவனிடமிருந்து அவனது குடும்பத்தாரின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அடைந்ததாய் நினைக்க போர்கொடி தூக்கினார்கள். வெள்ளைகொடி இவன் தூக்க இல்லை போர்தான் என்று சங்கு ஊதினார்கள்.

மிரட்டல்கள் உருட்டல்கள் துவங்கின ஆனாலும் வெள்ளைகொடியை தாங்கி பிடித்தே நின்றான். இவன் போரி்ல் ஈடுபடுவதற்கான எந்த ஆயுத்தம் செய்யவில்லை சங்கும் ஊதவில்லை.

போரின் முடிவு யார் ஒருவருக்கோ வெற்றியாக முடியும். குடும்ப போரில் பாதிக்கப்போவது இருதரப்பாருடைய மன நிம்மதி தான்.

எதிர்தரப்பிடமிருந்து மிரட்டல் உருட்டல்களும் நின்றபாடில்லை ஆனாலும் இவன் வெள்ளைகொடியை பிடித்தவாறே ஒற்றைஆளாய்..

LinkWithin

Related Posts with Thumbnails